இந்தியா போன்ற வளரும் நாடுகளின் பொருளாதாரம் இயற்கைப் பேரிடர்களால் பெரும் நெருக்கடிகளைச்
சந்திக்கும்
ஆக.15,2012. இந்தியா, பிலிப்பின்ஸ் ஆகிய வளரும் நாடுகளின் பொருளாதாரம் இயற்கைப் பேரிடர்களால்
பெருமளவு நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. இயற்கைப்
பேரிடர்களிலிருந்து எவ்வளவு விரைவில் ஒரு நாடு மீளமுடிகிறது என்ற ஆய்வை மேற்கொண்ட Maplecraft
என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், நெருக்கடிகளைச் சமாளிக்கும் திறனில் இறுதி
நிலையில் உள்ள 10 நாடுகளைப் பட்டியலிட்டுள்ளது. இயற்கைப் பேரிடர் நெருக்கடிகளைச் சமாளிப்பதில்
மிகவும் பின்தங்கிய நாடு பங்களாதேஷ் என்றும், அதற்கு அடுத்தபடியாக பிலிப்பின்ஸ் மற்றும்
தோமினிக்கன் குடியரசு ஆகிய நாடுகள் என்று கூறும் இந்தப் பட்டியலில், இந்தியா ஐந்தாம்
இடத்தில் உள்ளது. 2011ம் ஆண்டு நிகழ்ந்த இயற்கை பேரிடர்களைச் சமாளிக்க உலகம் 38,000
கோடி டாலர்கள் செலவழித்தது என்று கூறும் இவ்வறிக்கை, இந்தச் செலவின் பெரும்பகுதி ஜப்பானில்
உருவான நிலநடுக்கம், சுனாமி இவைகளால் ஏற்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது. வளர்ந்து
வரும் பொருளாதாரங்கள் என்று கருதப்படும் நாடுகளே இயற்கைப் பேரிடர்களுக்குப் பெருமளவில்
உள்ளாக்கப்படுகின்றன என்று கூறும் இவ்வறிக்கை, இதற்கு எடுத்துக்காட்டாக, சீனா, மெக்சிகோ,
இந்தியா, பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளைச் சுட்டிக் காட்டியுள்ளது.