விசாகப்பட்டினம் உயர் மறைமாவட்ட புதிய பேராயர் பொறுப்பேற்றார்
ஆக.10,2012. விஜயவாடா ஆயராக பணியாற்றிய பிரகாஷ் மல்லவரப்பு அவர்கள், விசாகப்பட்டினம்
உயர் மறைமாவட்ட பேராயராக பொறுப்பேற்ற திருப்பலியை இந்தியாவின் திருப்பீடத் தூதர் பேராயர்
Salvatore Pennacchio, முன்னின்று நடத்தினார். விசாகப்பட்டினம் உயர் மறைமாவட்டப் பேராலயத்தின்
திறந்த வெளியரங்கில் நடைபெற்ற இந்த விழாவில், ஒய்வு பெற்றுள்ள முன்னாள் பேராயர் மரியதாஸ்
காகிதப்பூ அவர்களுக்குப் பிரியாவிடையும் அளிக்கப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் பல்வேறு
மறைமாவட்டங்களிலிருந்து வந்திருந்த ஆயர்கள், அருள் பணியாளர்கள், இருபால் துறவியர், பொதுமக்கள்
முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், ஓய்வெடுத்துச் செல்லும் பேராயர் காகிதப்பூ அவர்கள்
பணியை பாராட்டியும், புதிதாகப் பொறுப்பேற்கும் பேராயர் மல்லவரப்பு அவர்களை வரவேற்றும்
வத்திக்கானிலிருந்து அனுப்பப்பட்டிருந்த வாழ்த்துச் செய்திகள் வாசிக்கப்பட்டன. 160
ஆண்டுகள் வரலாறு கண்டுள்ள விசாகப்பட்டினம் உயர் மறைமாவட்டத்தில் 2,50,186 கத்தோலிக்கர்கள்
உள்ளனர், 154 குருக்களும், 500க்கும் மேற்பட்ட இருபால் துறவியரும் இங்கு பணிபுரிகின்றனர்.