2012-08-10 15:29:18

வறியவர்களுக்குப் பணிசெய்வதே திருஅவையின் முக்கியப் பணி - கர்தினால் Angelo Bagnasco


ஆக.10,2012. திருஅவையின் முக்கியக் கருவூலம் வறியவர்கள் என்பதையும், வறியவர்களுக்குப் பணிசெய்வதே ஒவ்வொரு நாட்டிலும் திருஅவையின் முக்கியப் பணி என்றும் இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவர் கர்தினால் Angelo Bagnasco கூறினார்.
ஆகஸ்ட் 10 இவ்வெள்ளியன்று கொண்டாடப்பட்ட புனித இலாரன்ஸ் திருநாளன்று ஜெனோவா பேராலயத்தில் திருப்பலியாற்றி, மறையுரை வழங்கிய ஜெனோவா பேராயர் கர்தினால் Bagnasco, திருஅவையின் செல்வங்களைத் தனக்கு அளிக்குமாறு பணித்த உரோமைய அதிகாரியின் முன் வறியோரை நிறுத்திய புனித இலாரன்ஸ் வாழ்வு நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்டினார்.
'பேரரசனுக்குப் பணிபுரிய மாட்டேன்' என்ற விருதுவாக்குடன் வாழ்ந்த புனித இலாரன்ஸ் என்ற இளைஞன், இன்றும் இளையோருக்கு பொருளுள்ள ஓர் எடுத்துக்காட்டாக இருக்கிறார் என்று கூறிய கர்தினால் Bagnasco, பொருளாதாரச் சரிவில் சிக்கியுள்ள இவ்வுலகில், இளையோர் தங்கள் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் வாழ புனிதர் வழிகாட்டுகிறார் என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.