ஆக.08,2012. தமிழ்நாட்டிலுள்ள அரியலூர் பகுதி கடந்தகாலத்தில் ஆழ்கடலுக்குள் மூழ்கியிருந்தபோது
அங்குவாழ்ந்த கடல்வாழ் உயிரினங்களின் ‘Fossils’ எனப்படும் அரியவகை தொல்படிமங்கள் அந்த
பகுதியின் சிமெண்ட் தொழிற்சாலைகளால் அழிந்துவருவதாக கவலைகள் அதிகரித்துவருகின்றன. தமிழ்நாட்டின்
வறட்சியான மாவட்டங்களில் ஒன்றாக பரவலாகக் கருதப்படும் இன்றைய அரியலூர் மாவட்டத்தின் பெரும்பகுதி
65 முதல் 146 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கடலுக்கடியில் முழ்கியிருந்தது என்பது பலருக்கும்
தெரியாத செய்தி. ஆனால் உலகின் பல நாடுகளைச்சேர்ந்த புவியியல் நிபுணர்கள் மத்தியில்
அரியலூரில் கிடைக்கும் ஆழ்கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் மிகவும் புகழ்பெற்றவை. ஏறக்குறைய
60 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு நிலவியல் மற்றும் கடலியல் நிபுணர்கள் இந்த படிமங்களை
கண்டறிவதிலும், வகைப்படுத்துவதிலும், ஆராய்வதிலும் ஈடுபட்டுவருகிறார்கள். அதேசமயம்,
அரியலூரில் செயற்பட்டுவரும் சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருளை வெட்டியெடுக்கும்போது
இந்த அரியவகை படிமங்களும் அழிவதாக கூறப்படுகிறது. இப்படி அழிந்துவரும் அரியவகை கடல்வாழ்
உயிரினங்களின் தொல்படிமங்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் அந்த மாவட்டத்தைச்
சேர்ந்த ஆய்வாளர் எஸ் எம் சந்தரசேகர்.