Home Archivio
2012-08-07 15:28:55
கவிதைக் கனவுகள் - ஆண்டவன் தேடும் ஆலயம்
lankasripoems.com என்ற இணையதளத்தில் கவிஞர் வல்வை சுஜேன் எழுதிய கவிதையிலிருந்து சில வரிகள்...
ஆசை மன வாசலுக்குள்
ஆடும் ஊஞ்சல் நூல் இழையில்
இழுக் கெல்லாம் இழையேற்றி
இறை அடி தேடும் நெஞ்சே
உன் வெண் மன அகம்தனிலே
அழுக்கேறி இருள் இருக்க
நீ வடித்த கோபுரக் கூண்டுக்குள்
இறை வாழ குடி புகுவேனா சொல்
பணம் வேண்டேன் பால் வேண்டேன்
பஞ்சாமிர்த சுவை வேண்டேன்
நிறம் மாறா பால் மனம் என்றால்
நிதம் வாழ்வேன் நிழலாக உன்னிடத்தில்
அடியும் முடியும் தேடு
ஆள் மனசில் ஆசை வார்க்காதே
பொய் சுமந்த தாழம் பூவானால்
பூநாகமே குடிபுக புறையோடும் உன் மனசு
மனம் எனும் கோயிலிற்குள்
மிதவாத முள் எதற்கு
உன் வெறி கொண்ட வேள்வியில்
தறி கொண்டோடுதே குருதி
நதியாகி நானிலத்து
ஆலயங்கள் நீ வளர்த்து
அதில் ஆராதனை ஒளி வளர்த்து
தாழிட்ட கதவுக்குள் சிறையிட்டு
சிதைக்கிறாய் என்னை சிலையிருத்தி
உள்ளக் கோயிலைத் தூய்மையாக்கு
இல்லார்க்கு ஈர்ந்து கொடு
பூசைக்குகந்த புஸ்பங்களாவாய்
ஆட் கொள்வேன் உன்னை
ஆராதனை வேளை
நான் தேடும் ஆலயம் வெண் இதயமே.
All the contents on this site are copyrighted ©.