ஆகஸ்ட் மாதம் ஆரம்பமானதும்,
நம் நினைவுகளை ஆக்கிரமிப்பது அணுகுண்டுத் தாக்குதல்கள். ஆம், 1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6,
9 ஆகிய இரு நாட்கள் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நகரங்களில் அணுகுண்டு தாக்குதல்களை
நிகழ்த்தியது அமெரிக்க ஐக்கிய நாடு. இத்தாக்குதல்களால் ஏற்பட்ட அழிவுகளைப்பற்றி நாம்
பக்கம்பக்கமாக வாசித்துவிட்டோம். எனவே புள்ளிவிவரங்களில் நாம் நேரத்தைச் செலவழிக்க வேண்டாம்.
அணுசக்தியின் பாதகமான விளைவுகளை நாம் இன்னும் சரியாகப் புரிந்துகொண்டுள்ளோமா என்பதே நம்
கவலை. ஹிரோஷிமா அணுகுண்டு அழிவு முதல் Fukushima அணுஉலை விபத்து வரை மனிதகுலம் அணுசக்தியை
இன்னும் நம்பி வாழ்கிறதே என்ற கவலையை இறைவனிடம் எடுத்துச்சொல்லும் கட்டாயத்தில் நாம்
இருக்கிறோம்.
அணுசக்தியைப் பற்றி, அணுஉலைகளைப் பற்றி பல கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள
முடியும். இரு எண்ணங்களை நாம் இன்று அலசுவது ஓரளவு பயனளிக்கும் என்று கருதுகிறேன். ஒரு
ஞாயிறு வழிபாட்டிற்கு இந்த எண்ணங்கள் தேவைதானா என்ற கேள்வி எழலாம். நம் வாழ்வை இன்று
பெருமளவில் பாதிக்கும் ஓர் உண்மையை, கிறிஸ்தவர்கள் என்ற முறையில் விசுவாசக் கண்ணோட்டத்துடன்
காண்பதற்கு ஞாயிறு வழிபாடு நல்லதொரு தருணம் என்று எண்ணுகிறேன்.
அணு சக்தியை காப்பாற்ற,
பொய்ம்மையில் நாம் வாழ வேண்டியுள்ளது என்பது முதல் எண்ணம். அணுசக்தியின் உண்மைக் கதைகள்
எப்போதும் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளன என்பதற்கு வரலாற்றில் பல வலுவான சான்றுகள்
உண்டு. ஹிரோஷிமா, நாகசாகியில் அமெரிக்கா அணுகுண்டுகளை வீசியபோது, மனசாட்சியுள்ள பல்லாயிரம்
அமெரிக்க மக்கள் சங்கடமான கேள்விகளை எழுப்பினார்கள். அவர்களது குரலை அடக்கியவர்கள்,
James Conant, Harvey Bundy, Henry Stimson என்ற மூவர். இரண்டாம் உலகப்போரை முடிவுக்குக்
கொண்டுவர அணுகுண்டு தாக்குதல்கள் தேவைப்பட்டன என்று இவர்கள் அமெரிக்க அரசின் சார்பில்
பேசி, மக்களை நம்பச்செய்தனர். ஆயினும், அன்றுமுதல் இன்றுவரை அமெரிக்கச் சமுதாயம் அந்தப்
பொய்யைச் சீரணிக்க முடியாமல் தவிக்கிறது. இதில் கூடுதலான ஓர் எண்ணம் என்னவெனில், ஆகஸ்ட்
6ம் தேதி காலை 8.15க்கு ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்டபோது, அமெரிக்காவில் இரவு நேரம்.
மக்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அந்த இரவிலிருந்து, பொய்யிலிருந்து அவர்கள் இன்னும்
மீளவில்லை என்பது கசப்பான உண்மை. ஆகஸ்ட் 5 இந்த ஞாயிறன்று நியூயார்க் நகரில் Pax Christi
என்ற கிறிஸ்தவ பிறரன்பு அமைப்பு ஒரு கருத்தரங்கையும், ஊர்வலத்தையும் நடத்துகின்றது. இந்தக்
கருத்தரங்கின் தலைப்பு: 'Nuclear Lies, Nuclear Truths' "அணுசார்ந்த பொய்களும், உண்மைகளும்".
அணுகுண்டு
தாக்குதல்களைப் பற்றி பொய்கள் சொல்லப்பட்டதுபோல், உலகில் உள்ள அணுஆயுதங்களைப் பற்றியும்
பல்லாயிரம் பொய்கள் நம்மிடையே உலவி வருகின்றன. ஒவ்வொரு நாடும் பதுக்கிவைத்திருக்கும்
அணு ஆயுதங்களைப்பற்றி அவ்வப்போது அரசுகள் சொல்லும் புள்ளிவிவரங்கள் பலவும் பொய்களே. அணு
ஆயுதங்களைப்பற்றி கேள்விகள் கேட்பதும், அவைகளைப்பற்றிப் பேசுவதும் ஏதோ பெரும் குற்றம்
என்பதுபோல் ஒரு சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால்,
இந்த உலகை ஐந்து முறைக்கும் அதிகமாக நாம் அழிக்கலாம் என்று கூறப்படுகிறது. உலகை அழிப்பதற்கு
அணு ஆயுதங்கள் மட்டும் போதாதென்று, உலகின் பெரும்பாலான நாடுகள் அணு உலைகளைக் கட்டிவருகின்றன.
நாடுகள் அமைத்துவரும் அணு உலைகளைப் பற்றியும், இதுவரை அணு உலைகளால் ஏற்பட்டுள்ள ஆபத்துக்களைப்
பற்றியும் ஏகப்பட்ட பொய்கள் தொடர்ந்து கூறப்படுகின்றன. கூடங்குளத்தில் உருவாக்கப்படும்
அணுமின் நிலையத்தைப்பற்றிய முழு விவரங்களையும் வெளிப்படையாகச் சொல்லுங்கள் என்று மக்கள்
போராடி வருகின்றனர். முழு விவரங்களும் இதுவரைச் சொல்லப்படவில்லை. கூடங்குளத்தில் மட்டுமல்ல,
உலகின் அனைத்து நாடுகளிலுமே அணு உலைகளைப்பற்றிய முழு உண்மைகள் மக்களிடமிருந்து மறைக்கப்பட்டு
வருகின்றன. அணுசக்தியை உலகில் காப்பாற்ற வேண்டுமெனில், பொய்யையும் நாம் கண்ணும்கருத்துமாய்
காப்பாற்ற வேண்டியிருக்கும். இது நமக்குத் தேவையா? ஏற்புடையதா?
இவ்வளவு ஆபத்தான
அணுசக்தி நமக்குத் தேவைதானா? மாற்று சக்திகளை நாம் பயன்படுத்த முடியாதா? என்ற கேள்விகள்
நமது இரண்டாவது சிந்தனையை ஆரம்பித்து வைக்கின்றன. இன்றைய உலகின் கழுத்தை நெரித்துக்கொண்டிருக்கும்
இரும்புக் கரங்கள், பாதுகாப்பின்மை என்ற பிரச்சனை. இந்தப் பிரச்சனையின் ஆணிவேராக இருப்பது
சுயநலமும், பேராசையும் என்று சென்ற ஞாயிறு சிந்தித்தோம். இந்தப் பாதுகாப்பின்மையை இன்னும்
சீர்குலைக்கும் அணு ஆயுதங்களுக்கும், அணு உலைகளுக்கும் ஆணிவேராக அமைவது மீண்டும் அதே
சுயநலமும் பேராசையும்தான்.
அணுசக்திக்கு மாற்றாக எத்தனையோ வகை இயற்கைச் சக்திகளை
நாம் பயன்படுத்த முடியும். நீர், காற்று, சூரியஒளி என்ற அனைத்தையுமே நாம் சக்திகளாக மாற்றமுடியும்.
அப்படி நாம் மாற்றும் இயற்கைச் சக்திகளைக்கொண்டு நமது தேவைகளைப் போதுமான அளவு நாம் நிறைவு
செய்துகொள்ளலாம். அதில் சந்தேகமேயில்லை. ஆனால், கட்டுக்கடங்காமல் வளர்ந்திருக்கும் நமது
சுயநலத்தையும், பேராசைகளையும் நிறைவேற்றும் ஆற்றல் இந்தச் சக்திகளுக்குக் கிடையாது.
இதுதான் பிரச்சனை. தேவைகளை நிறைவுசெய்யும் வாழ்வை ஒவ்வொருவரும் மேற்கொண்டால், நமக்கு
இத்தனை பொருட்கள் தேவையில்லை. மிகுதியான அந்தப் பொருட்களை உருவாக்கும் தொழிற்சாலைகள்
தேவையில்லை. அத்தொழிற்சாலைகளை இயக்கும் அணுசக்தியும் தேவையில்லை. எப்போது நாம் தேவைகளைத்
தாண்டி ஆசைகளையும், பேராசைகளையும்... வெறிகளாக வளர்த்துக்கொண்டோமோ, அப்போது அந்த வெறிகளை
நிறைவுசெய்ய, இயற்கைச் சக்திகளைத் தாண்டி, அணுசக்தியைத் தேடினோம். பேராசை வெறியால் நாம்
சேர்த்துவைத்துள்ள செல்வங்களைக் காக்க அணு ஆயுதங்களையும் தேடினோம்.
நான் இப்படிப்
பேசுவதைக் கேட்கும்போது, உங்களில் பலர் உள்ளுக்குள் சிரித்துக் கொள்ளலாம். நான் பேசுவது
21ம் நூற்றாண்டில் வாழும் நமக்கு ஒத்துவராத ஒன்று. இயற்கைச் சக்திகளை நம்பி வாழ்ந்தால்,
நாம் எல்லாரும் மீண்டும் கற்காலத்திற்குச் சென்று வேட்டையாடி, காய்கனிகளைத் திரட்டி வாழவேண்டியிருக்கும்,
முன்னேற்றமே இருக்காது... என்று இந்த எண்ணத்தை நீங்கள் எள்ளி நகையாட முடியும்.
ஆனால்
நாம் இன்று சந்திக்கும் பல பிரச்சனைகளின் ஆணிவேர் நமது கட்டுக்கடங்காத ஆசைகள் என்றும்,
அடுத்தத் தலைமுறையைப்பற்றி எவ்விதக் கவலையும் இன்றி நாம் சுற்றுச்சூழலை நிரந்தரமாக ஆபத்துக்கு
உள்ளாக்கும் போக்கில் செயல்படுகிறோம் என்றும் பல அகில உலக கருத்தரங்குகளில் நாம் பேசிவருகிறோம்...
அண்மையில் முடிவுற்ற Rio+20 கருத்தரங்கையும் சேர்த்து...
அணு உலைகள் என்ற கோவில்களைக்
கட்டி, அணுசக்தியை வழிபடும் நமது ஆசைகளையும், பேராசை வெறிகளையும் நீக்கிவிட்டு, நமது
தேவைகளையும், அடுத்தவர் தேவைகளையும் நிறைவேற்றும் வாழ்வை நாம் அமைத்துக் கொள்ளவேண்டும்
என்று கனவு காண்பதில் தவறில்லையே... இந்தக் கனவை எனக்குள் விதைத்தவை இன்றைய வாசகங்கள்.
எல்லா உயிரினங்களுக்கும் அடிப்படைத் தேவையாக இருக்கும் பசியைப்பற்றி முதல் வாசகமும்,
நற்செய்தியும் பேசுகின்றன. எல்லா உயிரினங்களுக்கும் பசி என்பது பொதுவென்றாலும், மனிதரும்,
மற்ற உயிர்களும் இந்த அடிப்படைத் தேவையை நிறைவு செய்வதில்தான் எத்தனை, எத்தனை வேறுபாடுகள்!!! இன்றைய
முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள் பசியால் வாடுகின்றனர். இறைவனையும், மோசேவையும் எதிர்த்து
முணுமுணுக்கின்றனர். இறைவன் மோசே வழியாகத் தரும் பதிலுரை இதுதான்: விடுதலைப்பயண
நூல் 16: 4 “இதோ பார்! நான் உங்களுக்காக வானத்திலிருந்து
அப்பத்தைப் பொழியப் போகிறேன். மக்கள் வெளியே போய்த் தேவையானதை அன்றன்று சேகரித்துக்கொள்ள
வேண்டும். என் கட்டளைப்படி நடப்பார்களா இல்லையா என்பதை நான் இவ்வாறு சோதித்தறியப் போகிறேன்.”
இறைவனின்
இந்தக் கூற்றில் ஒரு பகுதி என் நெஞ்சில் 'பளீர்' என, சாட்டையடிபோல் விழுந்தது. தேவையானதை
அன்றன்று சேகரித்துக் கொள்ள வேண்டும். அடிமைகளாக இருந்த இஸ்ரயேல் மக்கள் ஒரு
நாட்டை உருவாக்கும் மக்களாக மாறுவதற்கு இறைவன் பாடங்கள் சொல்லித் தந்தார். பாடங்களை அவர்கள்
பயின்றனரா என்பதைப் பரிசோதிக்க, தேர்வும் வைத்தார். ஒவ்வொருவரும் அவரவருக்குத் தேவையானதை
அன்றன்று சேகரித்துக் கொள்ள வேண்டும். இம்மக்கள் தங்கள் தேவைகளை மட்டும் நிறைவுசெய்து
வாழும் மக்களாக இருப்பார்களா அல்லது பேராசையில் அதிகம் சேர்த்துவைக்கும் மக்களாக இருப்பார்களா
என்பதே இறைவன் தந்த முதல் சோதனை. இந்தச் சோதனையில் வென்றவரும் உண்டு, தோற்றவரும் உண்டு.
அடுத்த நாளுக்குச் சேர்த்தவர்களின் உணவு புழுவைத்து நாற்றமெடுத்தது என்று இதே 16ம் பிரிவின்
பிற்பகுதியில் நாம் வாசிக்கிறோம்.
அன்றும் சரி, இன்றும் சரி... தேவைக்கும் அதிகமாகச்
சேர்த்துவைப்பது மனிதர்கள் மத்தியில் நடமாடும் ஒரு நோயாக உருவெடுத்துள்ளது. சேர்த்துவைப்பதை
ஒரு நோய் என்று சொன்னால், மலைபோல் குவித்துவைப்பதை என்னென்று சொல்வது? குவித்துவைக்கும்
தீராத நோயில் சிக்கித்தவிக்கும் பல நாட்டுத் தலைவர்களை, தலைவிகளைப் பற்றி நாம் கேட்டுவரும்
கதைகள் நம்மை வியப்பிலும், வேதனையிலும் ஆழ்த்துகின்றன. ஆயிரம் சோடி காலணிகளைச் சேர்த்திருந்த
ஒரு தலைவி, நகைகளை, புடவைகளைச் சேர்த்திருந்த ஒரு தலைவி, பஞ்சு மெத்தையில், பஞ்சுக்குப்
பதிலாக, பணக்கட்டுக்களைப் பதுக்கிவைத்திருந்த அரசியல் தலைவர், குளிக்கும் தொட்டியைத்
தங்கத்தில் செய்திருந்த ஓர் அரசுத் தலைவர்... இந்த பட்டியலை இன்று முழுவதும் நம்மால்
வாசிக்கமுடியும். இவர்கள் வலியத்தேடி வரவழைத்துக்கொண்ட நோயினால், அந்த நாட்டு மக்கள்,
முக்கியமாக வறியோர் அடையும் துன்பங்கள் ஏராளம்.
சேகரித்து வைக்கும் பேராசை நோய்
பல்வேறு அளவுகளில் நம் ஒவ்வொருவரிலும் உள்ளது. இந்த நோயின் பக்கநோயாக இருப்பது குறுக்கு
வழியைத் தேடுவது. இந்த நோயைப்பற்றி இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம்.
தன்னைத்
தேடிவந்த மக்களைப்பார்த்து இயேசு கூறும் வார்த்தைகள், நாம் அனைவரும் குறுக்கு வழி விரும்பிகள்
என்பதை நமக்கு நினைவுறுத்துகிறது. யோவான் நற்செய்தி 6: 24-26 அக்காலத்தில்,
இயேசுவும் அவருடைய சீடரும் அங்கு இல்லை என்பதைக் கண்ட மக்கள் கூட்டமாய் அப்படகுகளில்
ஏறி இயேசுவைத் தேடிக் கப்பர்நாகுமுக்குச் சென்றனர். அங்கு கடற்கரையில் அவர்கள் அவரைக்
கண்டு, “ரபி, எப்போது இங்கு
வந்தீர்?” என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக,
“நீங்கள் அரும் அடையாளங்களைக் கண்டதால் அல்ல, மாறாக,
அப்பங்களை வயிறார உண்டதால்தான் என்னைத் தேடுகிறீர்கள் என உறுதியாக உங்களுக்குச்
சொல்கிறேன்.
அருட்பணி இயேசு கருணா என்பவர் இப்பகுதியைப்பற்றி ஞாயிறு
மின்னலில் தன் சிந்தனைகளை இவ்வாறு பகிர்ந்துகொள்கிறார்: யூதர்களின் தேடலில் இருந்த
வெளிவேடத்தை இயேசு தோலுரித்து காட்டுகிறார். இயேசு ஐந்து அப்பங்களைப் பலுகச் செய்து ஐயாயிரம்
பேருக்குக் கொடுத்தவுடன் அங்கிருந்த மக்களுக்கு ஒரு மாயை வந்துவிடுகிறது. அது என்னவென்றால்,
ஏற்கனவே நாம் பட்டினியாகக் கிடக்கின்றோம். உழைக்க வேண்டுமானால், வேலையும் கிடைப்பதில்லை.
வேலை கிடைத்தாலும், கடினமாக இருக்கிறது. அப்படியே சம்பளம் வாங்கினாலும், ஏரோது ஒருபுறம்,
உரோமைய அரசு மறுபுறம் என அதை வரியாக நம்மிடமிருந்து பிடுங்கிவிடுகின்றனர். ஆகவே, இயேசு
பின்னாலேயே செல்வோம். உழைக்கவும் தேவையில்லை. உணவும் கிடைக்கும் என்ற மயக்க நிலைக்கு
ஆளாகின்றனர். இயேசு இந்த மாயை உணர்வைச் சாடுகின்றார்.
குறுக்கு வழிகள் என்ற மாயையையும்,
பேராசை வெறிகளையும் போக்குவதற்கு இயேசு சொல்லும் ஒரு வழி: யோவான் நற்செய்தி 6:
27 அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம். நிலைவாழ்வு தரும்
அழியாத உணவுக்காகவே உழையுங்கள். அவ்வுணவை மானிடமகன் உங்களுக்குக் கொடுப்பார்.
பேராசை
வெறிகளைக் களைந்து, நம்முடைய, பிறருடைய தேவைகளை நிறைவேற்றும் மனதை வளர்த்துக்கொள்ளவும்,
தேவைகளைத் தேவன் தீர்ப்பார் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்ளவும் இந்த ஞாயிறு வழிபாட்டில்
உருக்கமாக மன்றாடுவோம். தேவனை நம்பாமல், தேவைகளைப் பெருக்கி, பேராசை வெறியர்களாக நாம்
மாறினால், ஆண்டவனை ஒதுக்கிவிட்டு, அணுசக்திக்குக் கோவில் கட்டி கும்பிட வேண்டியிருக்கும்,
எச்சரிக்கை!!!