மனிதாபிமான உலக நாளையொட்டி, மனிதாபிமானச் செயல் ஒன்றில் ஈடுபட ஐ.நா. உயர் அதிகாரி அழைப்பு
ஆக.03,2012. ஆகஸ்ட் 19ம் தேதி கடைப்பிடிக்கப்படவிருக்கும் மனிதாபிமான உலக நாளுக்கென ஒரு
கொள்கைப்பரப்பு திட்டத்தை ஐ.நா. அவை இவ்வியாழனன்று வெளியிட்டது. இத்திட்டத்துடன் iwashere.org
என்ற இணையதளத்தையும் வெளியிட்டுப் பேசிய ஐ.நா. உயர் அதிகாரி Valerie Amos, மனிதாபிமான
உலக நாளன்று ஒவ்வொரு மனிதரும் சிறிதோ, பெரிதோ எதோ ஒரு வகையில் மனிதாபிமானச் செயல் ஒன்றில்
ஈடுபட்டு, அதனை இந்த வலைதளத்தில் பதிவு செய்யலாம் என்ற பரிந்துரையை வெளியிட்டார். 2003ம்
ஆண்டு, ஆகஸ்ட் 19ம் தேதி, பாக்தாத் நகரில் உள்ள Canal உணவு விடுதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில்
22 ஐ.நா. பணியாளர்கள் கொல்லப்பட்டனர், மற்றும் 150 பேர் காயமுற்றனர். இவர்கள் நினைவாக,
அந்நாளை மனிதாபிமான உலக நாளாக ஐ.நா. அவை 2008ம் ஆண்டில் அறிவித்தது. கலவரங்கள் நிறைந்துள்ள
உலகின் பல இடங்களில் மக்களைக் காக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள பல தன்னார்வத் தொண்டர்களையும்,
பிறரன்புப் பணியாளர்களையும் இந்நாளில் நினைவு கூறவேண்டும் என்ற வேண்டுகோளை ஐ.நா. விடுத்துள்ளது. நான்
இங்கு இருந்தேன் என்ற பொருள்படும் I Was Here என்ற பாடலை புகழ்பெற்ற பாடகர் Beyoncé ஐ.நா.
பொதுஅவை அரங்கத்தில் பாடுவார் என்றும், அந்தப் பாடல் ஓர் இசை ஒளிக்கோப்பாக உலகெங்கும்
வெளியிடப்படும் என்றும் ஐ.நா. செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.