அணுஆயுதமற்ற உலகுக்கு இந்திய தேசிய கிறிஸ்தவ அவை அழைப்பு
ஆக.03,2012. ஹிரோஷிமா தினத்தைக் கடைப்பிடிப்பதற்கு உலகம் தயாரித்துவரும்வேளை, அணு ஆயுதமற்ற
உலகு உருவாகுவதற்குச் செபிக்குமாறு தனது அங்கத்தினர்களைக் கேட்டுள்ளது இந்திய தேசிய கிறிஸ்தவ
அவை. ஜப்பானின் ஹிரோஷிமாவில் அமெரிக்கா அணுகுண்டைப் போட்ட, 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம்
தேதி மனிதக் கலாச்சாரத்தில் ஒரு கறுப்பு நாள் என்று இவ்வியாழனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியுள்ளது இந்திய தேசிய கிறிஸ்தவ அவை. வரலாற்றில் 67 வருடங்களுக்கு முன்னர் நடந்து
முடிந்த நிகழ்வாக மட்டும் இதனை நோக்க முடியாது, ஏனெனில் இன்றும் ஜப்பானில் மக்கள் அணுக்கதிர்வீச்சால்
துன்புறுகின்றனர் என்று கூறும் இவ்வறிக்கை, தங்களையே அழித்துக் கொள்ளும் அணுஆயுதங்களைத்
தயாரிப்பதற்கு மனிதர்கள் ஏன் இவ்வளவு வேகம் காட்டுகிறார்கள் எனவும் கேட்டுள்ளது. அணு
இல்லாத இந்தியா உருவாக கிறிஸ்தவர்கள் அனைவரும் ஆகஸ்ட் 5ம் தேதி ஞாயிறன்று சிறப்பாகச்
செபிக்குமாறும் இந்திய தேசிய கிறிஸ்தவ அவை கேட்டுள்ளது.