திருத்தந்தையின் ஆறுதல் வார்த்தைகள் சிரியாவின் மக்களுக்கு நம்பிக்கையின் அடையாளமாக இருக்கின்றன
ஜூலை31,2012. துன்புறும் சிரியா மக்களோடு திருத்தந்தை ஆன்மீகரீதியில் ஒருமைப்பாட்டுணர்வு
கொண்டு அவர்களுக்கு அவர் தெரிவிக்கும் ஆறுதல் தங்கள் இதயங்களில் நம்பிக்கையை விதைப்பதாகத்
தெரிவித்தார் அலெப்போ அர்மேனிய-கத்தோலிக்க ரீதி பேராயர் Boutros Marayati. சிரியாவில்
அமைதி ஏற்படுவதற்கு இஞ்ஞாயிறு மூவேளை செபத்திற்குப் பின்னர் திருத்தந்தை விடுத்த அழைப்பு,
சிரியாவின் சுன்னி இசுலாம் பிரிவினருக்கும் Alawites இசுலாம் பிரிவினருக்கும் இடையே அமைதியும்
ஒப்புரவும் ஏற்படுவதற்குச் செபிக்க வேண்டுமென்று அந்நாட்டுக் கத்தோலிக்கருக்கு நினைவுபடுத்துவதாக
அமைந்துள்ளது என்றும் பேராயர் Marayati தெரிவித்தார். திருத்தந்தையின் இந்த அழைப்பு
ஏற்கனவே அரபு மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்றும், சிரியாவின் பல்வேறு பங்குகளில்
அது விநியோகிக்கப்படும் என்றும் அலெப்போ பேராயர் கூறினார். சிரியாவின் இராணுவத்துக்கும்
சுதந்திர சிரியா இராணுவம் என்ற புரட்சிப்படைக்கும் இடையே தொடர்ந்து இடம்பெற்று வரும்
வன்முறைகளின் மத்தியில் அப்பாவி மக்கள் ஆதரவற்று பயந்த நிலையில் வாழ்கின்றனர் என்றும்
அவர் கூறினார். Alawites என்ற இசுலாம் பிரிவானது, சிரியாவிலுள்ள புகழ்பெற்ற தியானயோகப்
பிரிவாகும். இது ஷியா இசுலாமின் Twelver என்ற பிரிவைச் சேர்ந்தது.