2012-07-28 14:41:51

29-07-12 பொதுக்காலம் - 17வது ஞாயிறு - சிந்தனை


RealAudioMP3 இவ்வெள்ளியன்று 30வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் இலண்டன் மாநகரில், பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் ஆரம்பமாயின. இந்த ஒலிம்பிக் விளையாட்டுக்களும், இதைத் தொடர்ந்து அதே இலண்டன் மாநகரில் நிகழவிருக்கும் மாற்றுத் திறனாளிகள் ஒலிம்பிக் விளையாட்டுக்களும் எவ்வித ஆபத்தும் இன்றி, அமைதியான முறையில் முடிவடைய இறைவனின் பாதுகாப்பை மன்றாடுவோம்.
விளையாட்டுப் போட்டிகளுக்கு இறைவனின் பாதுகாப்பை நாம் வேண்டிநிற்பது இன்றைய உலகின் பாதுகாப்பற்ற நிலையை நம் மனதில் ஆழமாய்ப் பதிக்கிறது. இந்த விளையாட்டுக்களை நடத்தும் பிரித்தானிய அரசு பாதுகாப்பிற்காக மேற்கொண்டுள்ள செலவும், செயல்பாடுகளும் நம்மை வியப்பில் ஆழ்த்தும் அதே வேளையில், ஒரு விளையாட்டை இவ்வளவு பாதுகாக்க வேண்டியுள்ளதே என்ற வேதனையையும் தூண்டுகிறது. எந்த நேரத்தில், எவ்விடத்திலிருந்து, எவ்வகையில் வன்முறைகள் வெடிக்கும் என்பது தெரியாமல் நாம் வாழ்ந்து வருகிறோம். இன்றைய நமது சமுதாயத்தை ஒவ்வொரு நாளும் சிதைக்கும் ஒரு பெரும் பிரச்சனை பாதுகாப்பின்மை.

பாதுகாப்புடன் வாழவேண்டும் என்பது மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரின் அடிப்படை வேட்கை. அண்மையக் காலங்களில் நாம் பாதுகாப்பு என்று பேசும்போது, மனித சமுதாயத்தைப் பாதுகாப்பதை மட்டும் நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. நம்மைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலையும் பாதுகாக்கவேண்டும் என்று எண்ணிப் பார்க்கிறோம். நாமும், நமது சுற்றுச்சூழலும் பாதுகாப்பின்றி போனதற்கு என்ன காரணம்? நமது சுயநலமும், பேராசையும் நம்மை இந்த பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளிவிட்டுள்ளன.
சுயநலமும், பேராசையும் கட்டுப்பாடின்றி வளர்ந்துவிட்டதால், இருப்பவர்கள் தேவைக்கும் மிகமிக அதிகமாகச் சேர்த்துக்கொண்டே உள்ளனர். இதனால், இல்லாதவர்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளையும் இழந்து தவிக்கின்றனர். இருப்பவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் இடையே நினைத்துப் பார்க்கவும் முடியாத ஒரு பெரும் பாதாளம் உருவாகிவிட்டது. இந்த வேறுபாடுதான் நமக்குள் பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கிவிட்டது. இல்லாதவர்கள் விரக்தியின் எல்லைக்கு விரட்டப்படும்போது, இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற நிலைக்கு அவர்கள் தள்ளப்படும்போது, அவர்களுக்கு உள்ள ஒரே வழி, இருப்பவர்களைத் தாக்குவது.

நாடுகளுக்கிடையில், சமுதாயங்களுக்கிடையில், தனி மனிதர்களுக்கிடையில் வெடிக்கும் வன்முறைகளை, அதனால் உருவாகியுள்ள பாதுகாப்பற்ற நிலையை ஆழமாக ஆய்வு செய்தால், இந்த நிலையின் ஆணிவேராக நாம் காண்பது... இருப்பவர் - இல்லாதவர் என்ற இணைக்கமுடியாத இருவேறு உலகங்கள்.
இப்படிப் பிளவுபட்டு நிற்கும் இந்த உலகங்களை இணைக்கும் வழிகளைத் தேடுவதற்குப் பதிலாக, இல்லாதவரின் உலகிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள இருப்பவரின் உலகம் ஆயுதங்களையும், அரசியல் தந்திரங்களையும் நம்பி வாழ்கிறது. இந்தப் பிரச்சனையைத் தீர்க்க ஒரே வழி... பகிர்வு. இருப்பது சிறிதளவேயாயினும், அதை இல்லாதாரோடு பகிர்ந்தால், இந்த உலகம் அதிகப் பாதுக்காப்பில் வளர்ந்து, பல புதுமைகளைக் காணமுடியும் என்பதை நமக்கு இன்றைய வாசங்கள் நினைவுறுத்துகின்றன.

மக்களின் பசியைப் போக்க, தங்களிடம் இருக்கும் உணவு போதுமா என்ற கேள்வி அரசர்கள் இரண்டாம் நூலிலும், யோவான் நற்செய்தியிலும் எழுப்பப்படுகிறது. இருந்தாலும், இறைவனை நம்பி உணவு பரிமாற்றம் ஆரம்பமாகிறது. இறுதியில், மக்கள் வயிறார உண்ட பின்னர், மீதம் உணவும் இருக்கிறது.
இவ்விரு நிகழ்வுகளையும் மேலோட்டமாகச் சிந்திக்கும்போது, ஓர் எண்ணம் தோன்ற வாய்ப்புண்டு. அதாவது, உலகின் பசியைப் போக்க, இல்லாதவர்களின் குறையைப் போக்க இறைவன் நேரில் வந்து ஏதாவது புதுமைகள் செய்யவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுவதற்கு வாய்ப்புண்டு. ஆயினும், இந்த இரு வாசகங்களையும் இன்னும் ஆழமாக ஆராய்ந்தால், ஓர் உண்மை தெளிவாகும். இறைவன் இந்த உணவை ஒன்றுமில்லாமையிலிருந்து உருவாக்கி, பலுகிப் பெருகச் செய்யவில்லை. கூட்டத்தில் ஒருவர் கொண்டுவந்து கொடுத்த உணவே இந்தப் புதுமையின் அடித்தளமாக அமைந்ததைப் பார்க்கலாம்.
அரசர்கள் - இரண்டாம் நூல் 4: 42
பாகால் சாலிசாவைச் சார்ந்த ஒரு மனிதர் புது தானியத்தில் செய்யப்பட்ட இருபது வாற்கோதுமை அப்பங்களையும், தம் கோணிப் பையில் முற்றிய தானியக் கதிர்களையும் கடவுளின் அடியவரான எலிசாவிடம் கொண்டு வந்தார்.
என்று இன்றைய முதல் வாசகம் ஆரம்பமாகிறது. ஒருவர் மனமுவந்து தந்த அந்த உணவு ஒரு நூறு பேருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.

நற்செய்தியிலும் இதேச் சூழலை நாம் காண்கிறோம். பாலை நிலத்தில் தன்னைத் தேடிவந்த மக்களைக் கண்டதும், அவர்களுக்கு விருந்து பரிமாறச் சொல்கிறார் இயேசு. இயேசுவின் அந்த ஆர்வத்திற்கு எதிராக, கேள்விகள் எழுகின்றன, ஒரு சிறுவனிடம் உணவு உள்ளதென்று சொல்லப்படுகிறது. அந்தச் சிறுவன் தந்த உணவு அங்கு நிகழ்ந்த அற்புதத்தைத் துவக்கிவைத்தது. சிறுவன் தந்த ஐந்து அப்பம், இரண்டு மீன், இறைமகன் ஆசீர்... ஐயாயிரம் பேர் வயிறார உண்டனர்... மீதியும் இருந்தது.
இந்தப் புதுமையை இருவேறு கண்ணோட்டங்களில் சிந்திக்கலாம். இயேசு தனி ஒருவராய் உணவைப் பலுகச்செய்தார் என்று சிந்திப்பது ஒரு கண்ணோட்டம். மற்றொரு கண்ணோட்டம் - ஒரு சில விவிலிய ஆய்வாளர்கள் சொல்லும் கருத்து. இந்தக் கண்ணோட்டத்தில் நம் சிந்தனைகளைத் துவக்கிவைப்பது ஒரு கேள்வி: சிறுவன் எதற்காக உணவுகொண்டு வந்திருந்தான்? பொதுவாக, வெளியூர் செல்லும்போது, முன்னேற்பாடாக உணவு எடுத்துச் செல்லவேண்டும் என்று குழந்தைகளோ, சிறுவர்களோ எண்ணிப் பார்ப்பதில்லை. அவர்களுக்குத் தேவையான உணவை தயாரித்து, எடுத்துச்செல்வது... பெற்றோரே. யூதர்கள் மத்தியில் இதுபோன்ற முன்னேற்பாடுகள் கூடுதலாகவே இருந்தன. காரணம் என்ன?
பல தலைமுறைகளாய், யூதர்கள் அடிமை வாழ்வு வாழ்ந்ததால் உணவின்றி தவித்தவர்கள். எனவே, அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறும்போது மடியில் கொஞ்சம் உணவு எடுத்துச் செல்வது அவர்கள் வழக்கம். அன்றும், பாலைநிலத்திற்கு இயேசுவைத் தேடிச்சென்ற அந்தக் கூட்டத்தில், ஒரு குடும்பம் இருந்தது. தாங்கள் செல்வது பாலைநிலம் என்பதால், குடும்பத்தலைவி முன்மதியோடு செயல்பட்டார். குடும்பமாய்ச் சென்ற தங்களுக்குத் தேவையான ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் தயாரித்திருந்தார். அந்த உணவு பொட்டலத்தை சிறுவன் சுமந்து வந்திருந்தான்.

மாலை ஆனதும் பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. உணவுப் பொட்டலங்களை யார் முதலில் பிரிப்பது? பிரித்தால், பகிர வேண்டுமே என்ற எண்ணங்கள் அந்த பாலை நிலத்தில் வலம் வந்தன! இயேசுவின் போதனைகளில் பகிர்வைப் பற்றி பேசினார்… சரிதான். ஆனால் எப்படி இத்தனை பேருக்குப் பகிரமுடியும்? இந்தக் கேள்விகளில் பெரியவர்களும், இயேசுவின் சீடர்களும் முழ்கி இருநதார்கள்.
யார் ஆரம்பிப்பது? இது நடக்கக் கூடிய காரியம்தானா? நமக்கேனக் கொண்டுவந்திருப்பதைக் கொடுத்துவிட்டால் நாம் என்ன செய்வது? நமது எதிர்காலம் என்னாவது? போன்ற கேள்விகள் பெரியவர்கள் மனதை ஆக்ரமிக்கும். குழந்தைகளின் எண்ண ஓட்டங்கள் பெரியவர்களின் எண்ண ஓட்டங்களைப் போல் இருக்காது. அதனால், அந்தப் புதுமை நிகழ்ந்தது.
மக்களுக்கு உணவளிப்பது பற்றி இயேசு சீடர்களிடம் பேசுவதைக் கேட்ட அந்தச் சிறுவன், அம்மா தன்னிடம் கொடுத்திருந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் இயேசுவிடம் கொண்டு வந்து கொடுத்தான். பின்விளைவுகளைச் சிறிதும் கணக்கு பார்க்காமல், கள்ளம் கபடமற்ற ஒரு புன்னகையுடன் அந்தச் சிறுவன் இயேசுவிடம் வந்து, தன்னிடம் உள்ளதையெல்லாம் பெருமையுடன் தந்ததை நாம் கற்பனை செய்து பார்க்கலாம். அந்தக் குழந்தையின் செயலால் தூண்டப்பட்ட மற்றவர்களும் தாங்கள் கொண்டுவந்திருந்த உணவைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தனர். ஆரம்பமானது ஓர் அற்புத விருந்து.

இரயில் பயணங்களைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன். நம் அனைவருக்கும் இந்த அனுபவம் இருந்திருக்கும். இரயிலில் பயணம் செய்யும்பொழுது, உணவுநேரம் வந்ததும், ஒரு சின்ன தயக்கம் உருவாகும். எல்லாரிடமும் உணவு இருந்தாலும், யார் முதலில் உணவு பொட்டலத்தைப் பிரிப்பது என்ற சின்ன தயக்கம். ஒருவர் ஆரம்பித்ததும், மற்றவர்களும் அரம்பிப்பார்கள். இதில் சில சமயங்களில் இன்னும் என்ன அழகு என்றால், ஒருவர் தன் உணவில் கொஞ்சம் மற்றவரோடு பகிர ஆரம்பித்ததும், எல்லாரும் கொஞ்சம் கொஞ்சம் பகிர்ந்து கொள்வர். அவரவர் கொண்டு வந்திருந்த உணவை விட, இன்னும் அதிக சுவையுள்ள விருந்து அங்கு நடக்கும்.
இதே போன்றதொரு அனுபவம் இயேசுவைச் சுற்றி அன்று நடந்திருக்க வேண்டும். ஒரு சிறுவன் ஆரம்பித்த பகிர்வு, ஒரு பெரிய விருந்தை ஆரம்பித்து வைத்தது. அந்த பகிர்வின் மகிழ்விலேயே அங்கு இருந்தவர்களுக்கு பாதிவயிறு நிறைந்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் உண்டதுபோக மீதியை 12 கூடைகளில் சீடர்கள் நிறைத்ததாக யோவான் நற்செய்தி கூறுகிறது. இயேசு அன்று நிகழ்த்தியது ஒரு பகிர்வின் புதுமை. இது இரண்டாவது கண்ணோட்டம். தனியொருவராய் இயேசு அப்பங்களைப் பலுகச் செய்தார் என்பது புதுமைதான். ஆனால், அதைவிட, இயேசு மக்களைப் பகிரச் செய்தார் என்பதை நான் மாபெரும் ஒரு புதுமையாகப் பார்க்கிறேன்.

நாம் வாழும் இன்றைய உலகில் இந்தப் பகிர்வுப் புதுமை அதிகம் தேவைப்படுகிறது. வளங்கள் பலவும் நிறைந்த இன்றைய உலகில் இன்னும் கோடான கோடி மக்கள் பசியிலும் பட்டினியிலும் மடிகின்றார்கள்.
அண்மையில் கிடைத்த ஒரு புள்ளிவிவரத்தின்படி, ஒவ்வொரு நாளும் 3.6 நொடிக்கு ஒருவர் பட்டினியால் இறக்கின்றார். இதில் என்ன கொடுமை என்றால், இந்த மரணங்கள் தேவையற்றவை. உலகத்தின் இன்றைய மக்கள் தொகை 680 கோடி. உலகில் தினம் தினம் 720 கோடி மக்கள் உண்பதற்குத் தேவையான அளவு உணவு உற்பத்தியாகிறது. இருந்தாலும், 130 கோடிக்கும் மேலான மக்கள் பட்டினியில் வாடுகின்றனர். கணக்கிட்டுப் பார்த்தால், ஒவ்வொரு நாளும் 170 கோடி மக்களுக்குப் போய் சேரவேண்டிய உணவு, ஒவ்வொரு நாளும் வீணாகக் குப்பையில் எறியப்படுகிறது. இது வேதனை தரும் உண்மை. இந்த நிலையால், ஒவ்வோர் ஆண்டும் 30 லட்சம் மக்கள் பட்டினியால் இறக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர் குழந்தைகள்.
இந்தத் தேவையற்ற மரணங்கள் நிறுத்தப்பட வேண்டுமானால், இயேசு அன்று ஆற்றிய பகிர்வுப் புதுமை மீண்டும் உலகமெல்லாம் நடக்கவேண்டும்.
வானிலிருந்து இறைவன் இறங்கி வந்து புதுமை செய்தால்தான் இவ்வுலகின் பசியைப் போக்க முடியும்; சக்திவாய்ந்த அரசுகள் மனது வைத்தால்தான் இந்தக் கொடுமை தீரும்; இருப்பவர்கள் பகிர்ந்து கொண்டால்தான் இல்லாதவர் நிலை உயரும் என்றெல்லாம் எதிர்பார்த்து காத்திருப்பதை விட்டுவிட்டு, பகிர்வு என்ற புதுமையை அந்தச் சிறுவனைப் போல் நம்மில் யாரும் ஆரம்பித்து வைக்கலாம்.
இதோ, இரு வாரங்களுக்கு முன், ஜூலை 15ம் தேதி, வெளியான ஒரு செய்தி. இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஒரு சிறு மாநிலமான மிசோராம், நமக்குப் பகிர்வுப் பாடத்தைச் சொல்லித் தருகிறது.
"Buhfai tham" அதாவது, "ஒரு கைப்பிடி அரிசி" என்ற ஒரு திட்டம் இங்கு செயல்வடிவம் பெற்றுள்ளது. இங்குள்ள மக்கள், பெரும்பாலும் வசதிகள் குறைந்த மக்கள். இவர்கள் ஒவ்வொரு முறையும் சோறு சமைக்கும்போது, ஒரு கைப்பிடி அரிசியை தனியே எடுத்து வைப்பார்கள். இப்படி ஒவ்வொரு வீட்டிலும் சேர்க்கப்படும் அரிசி, ஞாயிற்றுக் கிழமைகளில் பங்கு கோவிலுக்குக் கொண்டு வரப்படும். கோவிலில் சேர்க்கப்படும் அரிசி அப்பகுதியில் வாழும் மிகவும் வறியோர் மத்தியில் பகிர்ந்தளிக்கப்படும். ஒரு சிலர், அரிசியோடு, தங்கள் தோட்டங்களில் வளர்ந்த காய்களையும், பழங்களையும் காணிக்கையாகத் தருவர். இவை அனைத்துமே, ஞாயிறுத் திருப்பலியின் இறுதியில் வறியோர் மத்தியில் பகிர்ந்து தரப்படும்.
மிசோராம் மக்கள் சொல்லித்தரும் வழியை நாம் அனைவருமே பின்பற்ற முடியுமே! இதைத்தானே இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் சிறுவன் நமக்குச் சொல்லித் தருகிறான்? பகிர்வதால், பாசம் வளரும், பாதுகாப்பும் உலகில் பெருகும். பகிர்வுக்குப் பதில், சுயநலக் கோட்டைகள் பிரம்மாண்டமாக எழுந்தால், அந்தக் கோட்டைகளைக் காக்க இன்னும் தீவிரமான பாதுகாப்புத் திட்டங்கள் தேவைப்படும். ஒலிம்பிக் போட்டிகள் சொல்லித்தரும் இந்தப் பாடத்தைப் பயில்வோமா? அல்லது, நற்செய்தியில் சிறுவன் வழியாக இயேசு சொல்லித்தரும் பகிர்வுப் பாடத்தைப் பயில்வோமா? பகிர்வுப் பாடங்களைப் பச்சிளம் குழந்தைகளிடம் கற்றுக்கொள்ள நமக்கு இறைவன் பணிவான மனதைத் தரவேண்டுமென்று மன்றாடுவோம்.

இறுதியாக, ஓர் எண்ணம்... ஒரு வேண்டுதல்... மிசோராம் பற்றி சிந்திக்கும் இவ்வேளையில், அதன் அண்டை மாநிலமான அஸ்ஸாம் பற்றி நம் மனங்களில் உள்ள வேதனையை இறைவனிடம் எடுத்துரைப்போம். ஒரு வாரத்துக்கும் மேலாக அங்கு நிகழ்ந்துவரும் வன்முறைகளில் இதுவரை 45 பேர் இறந்துள்ளனர். 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்து நிராதரவாய் நிற்கின்றனர். இந்த வேதனையை முதலீட்டாக்கி, அரசியல் கட்சிகள் வியாபாரம் செய்துவருவது இன்னும் பெரும் வேதனைதான். அஸ்ஸாமில் விரைவில் அமைதி நிலவ இறைவனை மன்றாடுவோம்.








All the contents on this site are copyrighted ©.