செக் குடியரசில் திருஅவையிடமிருந்து பறிக்கப்பட்ட சொத்துக்களை மீண்டும் திருப்பித்
தரவேண்டுமென்ற சூழல்
ஜூலை,26,2012. 1948ம் ஆண்டு செக் குடியரசில் கம்யுனிச ஆட்சி நிறுவப்பட்டபோது, அந்நாட்டில்
திருஅவையிடமிருந்து பறிக்கப்பட்ட சொத்துக்களை மீண்டும் திருஅவைக்குத் திருப்பித் தர வேண்டுமென்ற
ஒரு தீர்மானம் அண்மையில் அந்நாட்டின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானம் தற்போது
செக் குடியரசின் மேலவையில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இத்தீர்மானம் சட்டமாக்கப்பட்டால்,
அரசின் அதிகாரத்திற்குக் கீழ் உள்ள திருஅவையின் நிலங்களும் மற்ற நிறுவனங்களும் மீண்டும்
திருஅவைக்குத் திருப்பித்தரப்பட வேண்டும். நிறுவனங்கள் திருப்பித் தரப்படும் நிலையில்
இல்லையெனில், அதற்குத் தகுந்த ஈட்டுத்தொகை வழங்கப்பட வேண்டும்.1948ம் ஆண்டு பிப்ரவரி
மாதம் 25ம் தேதி கம்யுனிச ஆட்சி அதிகாரத்தைக் கைபற்றியபோது திருஅவையிடமிருந்து பறிக்கப்பட்ட
சொத்துக்களின் மதிப்பு தற்போது 680 கோடி டாலர் மதிப்புடையது என்று சொல்லப்படுகிறது.