ஒலிம்பிக் பொருட்களை உருவாக்கிய சீனத் தொழிலாளிகள் பெருமளவு அநீதிகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்
ஜூலை,26,2012. ஒலிம்பிக் போட்டிகளையொட்டி விற்கப்படவிருக்கும் பல பொருட்களை உருவாக்கிய
சீனத் தொழிலாளிகள் பெருமளவு அநீதிகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்று ஹாங்காங் நகரில் உள்ள
மனித உரிமைகள் அமைப்பு ஒன்று பல கவலை தரும் விவரங்களை இப்புதனன்று வெளியிட்டது. (SACOM)
பெரும் தோழில் நிறுவனங்களின் முறைகேடுகளுக்கு எதிரான மாணவர்கள், அறிஞர்கள் என்ற இவ்வமைப்பினர்
வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், சட்டப்பூர்வமான வேலை நேரத்தைக் காட்டிலும் மூன்று மடங்கு
அதிகமாக ஒவ்வொரு தொழிலாளியும் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர் என்பதைக் குறிப்பிட்டுள்ளனர். குறைவான
கூலி, ஆபத்தான பணிச்சூழல் ஆகிய குற்றங்களைத் தொடர்ந்து செய்துவரும் பெரும் நிறுவனங்களை
ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் உயர்மட்டக் குழுவினர் ஆதரிப்பது, மனித குலத்திற்கு எதிரான
அநீதி என்று இவ்வமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஒலிம்பிக் போட்டிகள் நினைவுப்பொருட்களின்
விற்பனை இவ்வெள்ளியன்று ஆரம்பமாக உள்ளன. இந்நிலையில், சீனாவில் உருவாக்கப்பட்டப் பொருட்களை
ஆதரிப்பதால் அங்கு அநீதமான முறையில் தொழிலாளிகள் பயன்படுத்தப்படுவதை உலகம் ஆதரிக்கக்கூடாது
என்பதை வலியுறுத்தவே இவ்வறிக்கை வெளியிடப்படுவதாக இவ்வமைப்பினர் கூறியுள்ளனர். அடுத்து
வரும் ஒலிம்பிக் போட்டிகளின்போதாகிலும் இத்தகைய அநீதிகள் தொடராதவண்ணம் காக்க வேண்டியது
ஒலிம்பிக் உயர்மட்டக் குழுவினர் கடமை என்பதையும் இவ்வமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.