அஸ்ஸாம் பகுதியில் நிகழ்ந்து வரும் வன்முறைகள் முற்றிலும் மதியற்ற செயல் - ஆயர் Thomas
Pulloppillil
ஜூலை,25,2012. இந்தியாவின் அஸ்ஸாம் பகுதியில் நிகழ்ந்து வரும் வன்முறைகள் முற்றிலும்
மதியற்ற செயல் என்றும், வன்முறைகளுக்கு இலக்காகி வரும் மக்களுக்கு உதவிகள் செய்வதே நமது
முக்கிய கடமை என்றும் அஸ்ஸாம் ஆயர் ஒருவர் கூறினார். அஸ்ஸாம் பகுதியில் வாழும் Bodo
என்ற பழங்குடியினருக்கும், அப்பகுதியில் குடியேறியுள்ள இஸ்லாமியருக்கும் இடையே கடந்த
வெள்ளியன்று ஆரம்பமான இந்த வன்முறை குறித்து பேசிய Bongaigaon ஆயர் Thomas Pulloppillil,
வன்முறைகளால் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு தலத்திருஅவையின்
அனைத்து நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். Bodo இனத்தவர் மத்தியில் ஏற்பட்டுள்ள
அழிவுகள் பெருமளவில் இருந்தாலும், இஸ்லாமியர் மத்தியில் நிகழ்ந்துள்ள பாதிப்புக்களை மட்டும்
ஊடகங்கள் காட்டி வருகின்றன என்று பெயர் கூற விரும்பாத ஒரு கத்தோலிக்க குரு கூறியுள்ளார். கடந்த
வெள்ளியன்று ஆரம்பமான வன்முறைகள் பல இடங்களுக்கும் பரவியுள்ளதென்றும், இதுவரை 32 பேர்
இறந்துள்ளனர், மற்றும் 1,70,000 பேர் தங்கள் குடியிருப்புக்களைவிட்டு வேறிடங்களில் தஞ்சம்
புகுந்துள்ளனர் என்றும் ஆசிய செய்தி நிறுவனம் கூறியுள்ளது.