2012-07-17 15:40:55

கவிதைக் கனவுகள் - எங்கே நிம்மதி...?


எழுத்து.காம் என்ற இணையதளத்தில் muruganandan என்பவர் எழுதிய கவிதை...

நிம்மதி உங்கள்
காலடியில்
நிழலாய்
நீண்டிருக்க

நீல வான்வெளியில்
எட்டாத
நட்சத்திரங்களுக்குப்பின்னே
இன்னொரு
சூரியக்குடும்பத்தில்
இருக்கிறதென்று
நம்பிக்கொண்டிருப்பவர்களுக்கு
வந்தனம்.

மனதை மட்டும்
நீங்கள்
பொருத்திக்கொள்ள முடியுமென்றால்...
நிம்மதி
உங்கள்
ஒவ்வொருவருக்கும்
பொருந்துகிற
ஆடைதான்..

அளவுகளை மாற்றித் தைத்ததால்தான்
பருவத்திலேயே
நீங்கள்
நரைதட்டிப்போகிறீர்கள்...

எதையும்
ஏற்றுக்கொள்ளாத
மனைவி
எதற்கெடுத்தாலும்
சிடுசிடுக்கிற
கணவன்
குண்டூசி அளவேனும்
குற்றம் சாட்டும்
மேலாளர்
சில்லறையை மறந்ததற்காய்
சிதறடித்துப்போகும்
நடத்துனர்..
வயதுக்கு வரும்முன்னமே
வாழ்க்கைக்கு வரத்துடிக்கிற
காதல்
புன்னகையில் பூஜ்ஜியமாய்
கண்டிப்பான கணக்கு
வாத்தியார்
எப்படித்தான் சொல்லிக்கொடுத்தாலும்
படிக்க மறுக்கிற
மாணவன்
ஆட்சி மாறுகிற பொழுதெல்லாம்
கட்சி மாறுகிற
அரசியல்வாதி

இன்னொருவருக்கான
ஆடையில்
நீங்கள்
ஏன்
ஒளிந்திருக்கிறீர்கள்..?

மனதை மட்டும்
நீங்கள்
பொருத்திக்கொள்ள முடியுமென்றால்...
நிம்மதி
உங்கள்
ஒவ்வொருவருக்கும்
பொருந்துகிற
ஆடைதான்..








All the contents on this site are copyrighted ©.