இலங்கையில் வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்படுவதற்கு சென்னையில் எதிர்ப்பு
ஜூலை,11,2012. இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிரான போக்கிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவேண்டும்
என்று கூறி சென்னையில் பல்சமயத் தலைவர்கள் பங்குபெற்ற ஆர்ப்பாட்டம் இச்செவ்வாயன்று இடம்பெற்றது. இலங்கையில்
இஸ்லாமிய, இந்து, கிறுத்துவ மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாகவும், அழிக்கப்படுவதாகவும்
சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கூறினர். அனைத்து மத தமிழ்
மக்கள் மன்றம் எனும் அமைப்பு நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழக ஆயர் பேரவைத் தலைவர்
பேராயர் ஏ.எம். சின்னப்பா தலைமையேற்றிருந்தார். இலங்கையில் கத்தோலிக்கத் திருச்சபை
வழிபாட்டுத் தலங்கள் சேதப்படுத்தப்படுவது ஏற்கனவே திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின்
கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும் இந்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இலங்கைத்
தமிழர் பிரச்சனையில் ஐ.நா.அமைப்பு தலையிடவும், அவர்கள் அனைத்துரிமைகளையும் பெற்று வாழும்
வகையில் அரசியல் தீர்வு உருவாகவும் இந்தியா பல்வேறு தளங்களில் அழுத்தம் கொடுக்கவேண்டும்
என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரினர்.