அமேசான் மழைக்காடுகளைச் சுரண்டுவதில்கூட காலனி ஆதிக்கப் போக்கு தெரிகின்றது - பிரேசில்
ஆயர்கள் புகார்
ஜூலை06,2012. தென் அமெரிக்காவில் அமேசான் பருவமழைக் காடுகளைச் சுரண்டுவதில்கூட காலனி
ஆதிக்கப் போக்கைத் தாங்கள் பார்ப்பதாக பிரேசில் ஆயர்கள் குறை கூறினர். அமேசான் பகுதியில்
வெளிநாட்டவர் நுழைந்து வளங்களைச் சுரண்டி அப்பகுதி மக்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம்
குறித்து எந்தக் கவலையுமின்றி அப்பகுதியை விட்டுச் செல்வதற்கு பிரேசில் அரசு அனுமதியளிக்கின்றது
என்று Cameta ஆயர் Jesus Maria Berdonces கூறினார். அமேசான் பகுதியில் இடம்பெறும்
கனிமவளச் சுரங்கங்கள் மற்றும் வேளாண்மையால் கிடைக்கும் இலாபங்கள் அப்பகுதியிலேயே முதலீடு
செய்யப்பட வேண்டும் என்றும், இதில் அப்பகுதி மக்களும் ஈடுபடுத்தப்பட வேண்டுமென்றும் பிரேசில்
ஆயர்கள் வலியுறுத்தியுள்ளனர். தென் அமெரிக்காவில் 170 கோடி ஏக்கர் நிலபரப்பைக்
கொண்ட அமேசான் பகுதியில் 140 கோடி ஏக்கர், பருவமழைக் காடுகளைக் கொண்ட பகுதியாகும். இதில்
60 விழுக்காட்டுப் பகுதி பிரேசில் நாட்டைச் சேர்ந்தது. 13 விழுக்காட்டுப் பகுதி பெரு
நாட்டையும், 10 விழுக்காட்டுப் பகுதி கொலம்பியாவையும், Venezuela, Ecuador, Bolivia,
Guyana, Suriname மற்றும் French Guiana நாடுகள் இதில் சிறிய பகுதியையும் கொண்டுள்ளன.