மெக்சிகோ தேர்தல்கள் கண்ணியமான முறையில் நடைபெற்றது குறித்து அந்நாட்டு ஆயர்கள் மகிழ்ச்சி
ஜூலை,05,2012. மெக்சிகோவில் அண்மையில் முடிவடைந்த தேர்தல்கள் கண்ணியமான முறையில் நடைபெற்றது
குறித்து தங்கள் மகிழ்வை வெளியிட்டு, அந்நாட்டு ஆயர்கள் பேரவை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. கடந்த
ஞாயிறன்று முடிவடைந்த அரசுத் தலைவர் தேர்தலில் Enrique Peña Nieto அதிக வாக்குகள் பெற்று
அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தேர்தல் நேரத்தில் மக்களும் தேர்தல் அதிகாரிகளும்
கண்ணியமான முறையில் நடந்து கொண்டது, மெக்சிகோ நாட்டில் நல்லதொரு எதிர்காலம் உருவாவதற்கு
ஓர் அடையாளமாய் இருந்தது என்று மெக்சிகோ ஆயர்கள் பேரவை கூறியது. அரசுத் தலைவர் தேர்தலில்
போட்டியிட்டு வெற்றி பெறாத மற்ற அரசியல் தலைவர்களும் மக்களின் தீர்ப்பை கண்ணியமாகப் பெற்றுக்கொண்டது
தங்களுக்கு நிறைவைத் தருகிறது என்று கூறிய ஆயர்கள், புதிய அரசுத் தலைவர் மக்களின் நம்பிக்கைக்கு
உகந்தவராய் செயல்படவும் அழைப்பு விடுத்தனர்.