"பொருளாதார பிரச்சனையில் நன்னெறி அடித்தளங்கள்" - பார்சலோனா கருத்தரங்கில் வத்திக்கான்
அதிகாரி
ஜூலை,05,2012. மனித குலத்தின் பொது நலன் மற்றும் சமுதாய நீதி ஆகியவற்றின் அடிப்படையில்
உலகின் பொருளாதார விதிகள் செயல்பட வேண்டும் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார். "பொருளாதார
பிரச்சனையில் நன்னெறி அடித்தளங்கள்" என்ற மையப்பொருளில் ஸ்பெயின் நாட்டின் பார்சலோனாவில்
நிகழ்ந்த ஒரு கருத்தரங்கில் உரையாற்றிய திருப்பீட நீதி, அமைதி அவையின் செயலர் ஆயர் Mario
Toso, வர்த்தகத் துறை கடைபிடிக்க வேண்டிய நன்னெறி விழுமியங்களைக் குறித்துப் பேசினார். முன்னேற்றம்
குறித்து பல கருத்துக்களைப் பேசிவரும் நாம், இந்த முன்னேற்றம் நீதியின் அடிப்படையில்
எழுப்பப்பட்டால் மட்டுமே நிலைத்து நிற்கும் என்பதை ஆயர் Toso சுட்டிக் காட்டினார். நாம்
துவங்கியுள்ள இந்தப் புதிய நூற்றாண்டில் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் வழிகளில், செல்வம்
சேர்ப்பது, மற்றும் செல்வத்தைப் பகிர்வது ஆகிய இரு முக்கிய சமுதாயக் கூறுகளைச் சிந்திக்கவேண்டும்
என்ற வேண்டுகோளை இக்கருத்தரங்கில் முன் வைத்தார் ஆயர் Mario Toso.