2012-06-28 15:39:14

தினசரி 3 கப் காபி குடித்தால் ஞாபக மறதியே வராது: புதிய தகவல்


ஜூன்,28,2012. வயதானவர்கள் தினசரி மூன்று கப் காபி குடித்தால் அவர்களின் மூளை சுறுசுறுப்பாக இருக்கும், அல்சைமர்ஸ் (Alzheimer's) எனப்படும் ஞாபக மறதி நோய் வராது என்று சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
வயதானவர்களை அதிகம் பாதிக்கும் அல்சைமர்ஸ் நோய் குறித்து தெற்கு ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வுக்குழுவினர் மேற்கொண்ட ஓர் ஆய்வில், டாம்பா மற்றும் மியாமி நகரங்களைச் சேர்ந்த 65 வயது முதல் 88 வயதிற்குட்பட்ட 124 மூத்த குடிமக்கள் பங்கேற்றனர்.
அவர்களுக்கு தினசரி 3 கப் காபி குடிக்கக் கொடுக்கப்பட்டது. இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் வரை படிப்படியாக அவர்களை கண்காணித்தனர்.
பின்னர் அவர்களை ஆய்வு செய்ததில் அவர்களுக்கு டிமென்சியா நோய் தாக்குவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தது. மேலும் அல்சைமர்ஸ் நோய் பாதிப்புகள் ஏற்படும் அறிகுறிகளும் தென்படவில்லை. இதற்குக் காரணம் காபியில் உள்ள காஃபின் எனப்படும் பொருள்தான் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
திடீர் ஞாபகமறதி நோயளிகள், தங்களை அல்சைமர்ஸில் இருந்து தற்காத்துக் கொள்ள தினசரி 3 கப் காபி குடிப்பதில் தவறேதும் இல்லை என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த ஆய்வினை நான்கு ஆண்டுகள் மேற்கொண்ட ஆய்வாளர்கள், அதன் முடிவுகளை அல்சைமர்ஸ் நோய் பற்றிய பத்திரிக்கை ஒன்றில் வெளியிட்டுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.