வட இத்தாலியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகச் செபிக்குமாறு திருத்தந்தை
அழைப்பு
ஜூன்,25,2012. வட இத்தாலியில் அண்மையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட Emilia Romagna
பகுதி மக்களை இச்செவ்வாயன்று தான் சந்திக்கவிருப்பதாக இஞ்ஞாயிறு மூவேளை உரைக்குப் பின்
அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். உலகளாவியத் திருஅவை இம்மக்களுக்குத் தெரிவிக்கும்
ஒருமைப்பாட்டுச் செயலாக இந்தச் சந்திப்பை தான் நோக்குவதாகவும், செபத்தால் தன்னோடு ஒன்றித்திருக்குமாறும்
கேட்டுக்கொண்டார் திருத்தந்தை. இம்மக்களுக்கு Cor Unum பிறரன்பு அவை வழியாக, ஒரு
இலட்சம் யூரோக்களை திருத்தந்தை ஏற்கனவே வழங்கியுள்ளார். இத்தாலிய ஆயர் பேரவையும் 2 இலட்சம்
யூரோக்களை வழங்கியுள்ளது. இச்செவ்வாய் காலை 9 மணிக்கு வத்திக்கானிலிருந்து ஹெலிகாப்டரில்
புறப்படும் திருத்தந்தை, San Marino di Carpi யின் விளையாட்டுத் திடலுக்கு முதலில் செல்வார்.
பின்னர், ஆபத்தான நிலநடுக்கப்பகுதி எனக் குறிக்கப்பட்டுள்ள பகுதி வழியாகப் பேருந்தில்
Rovereto di Novi செல்வார். அந்நிலநடுக்கத்தில் அங்குள்ள புனித Caterina di Alessandria
ஆலயம் இடிந்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த அன்னைமரியா திருவுருவத்தை எடுக்கச்சென்ற பங்குத்தந்தை
Ivan Martini இறந்த இடத்தைப் பார்வையிடுவார். அதன்பின்னர் நகர அதிகாரிகள், ஆயர்கள், பங்குக்
குருக்கள், பொதுமக்கள் என அனைவரையும் திருத்தந்தை சந்திப்பார். இஞ்ஞாயிறன்று உலகெங்கும்
திருத்தந்தையின் பிறரன்புப் பணிகளுக்காக உண்டியல் எடுக்கப்பட்டதைக் குறிப்பிட்டு, தனது
பணிக்குத் தாராளமாக உதவும் அனைவருக்கும் நன்றியும் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.