ஜூன்,25,2012. நீதி தவறும்போது, மனிதர்கள் ஈட்டும் செல்வமும், அவர்கள் தரும் கடனும் மற்ற
மனிதரை, சிறப்பாக, எளியோரை வதைக்கும் கருவிகளாக மாறி விடுகின்றன என்று வத்திக்கான் அதிகாரி
ஒருவர் கூறினார். ஜூன் 18 முதல் ஜூலை 6ம் தேதி முடிய ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா.வின்
மனித உரிமை அவையின் 20வது அமர்வில் உரையாற்றிய திருப்பீட நிரந்தரப் பார்வையாளர் பேராயர்
சில்வானோ தொமாசி இவ்வாறு கூறினார். மனித உரிமைகளைக் காக்கும் வண்ணம் அந்நியநாட்டுக்
கடன் வழங்கப்படும் வழிமுறைகள் குறித்து நடைபெறும் இந்த அமர்வில் செல்வத்தைப்பற்றியும்
கடன் வழங்குவதுபற்றியும் திருஅவையில் காணப்படும் கருத்துக்களைப் பேராயர் தொமாசி முன்வைத்தார். மனிதமாண்பை
மையப்படுத்திய பொருளாதாரம், அரசியல், மற்றும் சமுதாய அமைப்பையே திருஅவை எப்போதும் வலியுறுத்தி
வந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டிய பேராயர் தொமாசி, மனித மாண்பை மிகவும் சீர்குலைக்கும்
வகையில், செல்வம், கடன் ஆகிய வடிவங்களில் பணம் உயர்ந்ததொரு இடத்தைப் பெற்றுவருவது வேதனையான
ஒரு போக்கு என்று எடுத்துரைத்தார். கடன்பட்டிருக்கும் ஏழை நாடுகளின் கடன்களை நீக்கும்
முயற்சிகள் தொடர்வதை ஐ.நா.வுடன் இணைந்து திருஅவையும் ஆர்வமாய் வரவேற்கிறது என்று பேராயர்
தன் உரையில் குறிப்பிட்டார். ஒவ்வோர் அரசும், செல்வம் மிகுந்த நிறுவனங்களும் பண விடயத்தில்
ஒளிவு மறைவற்ற வழிகளைப் பின்பற்றினால், உலகின் பொருளாதாரச் சரிவை ஓரளவாகிலும் நாம் சரி
செய்யமுடியும் என்று பேராயர் தொமாசி கேட்டுக்கொண்டார்.