ஜூன்,25,2012. இலண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் கலாச்சார நிகழ்ச்சியில் பங்கேற்க, சென்னையைச்
சேர்ந்த ‘ஸ்டக்காட்டோ’ இசைக் குழுவுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஆசியாவிலிருந்து
பல்வேறு குழுக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப் போட்டியிட்டாலும், இந்தியாவிலிருந்து
தங்கள் குழுவுக்கு மட்டும் வாய்ப்புக் கிடைத்திருப்பதாகவும், சீனாவிலிருந்து ஒரு குழு
தேர்வாகியிருப்பாதகவும், அந்தக் குழுவின் மேலாளர் அஜய் ஞானசேகரன் பிபிசி ஊடகத்திடம் தெரிவித்தார். இந்தியக்
கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் இசையின் தனித்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் தங்களது இசையின்
மாதிரியை ஒலிம்பிக் கலைநிகழ்ச்சிகளுக்குப் பொறுப்பாளரான பிரபல இயக்குநர் Danny Boyleக்குத்
தாங்கள் அனுப்பியதாகவும் அதுவே தங்களுக்கு வெற்றியைத் தேடித்தந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். ஜூலை
25ம் தேதி தங்கள் குழு இலண்டன் செல்ல இருப்பதாக அஜய் தெரிவித்தார். ஜூலை 30ம் தேதியும்,
ஆகஸ்ட் 2ம் தேதியும் ஒலிம்பிக் கலை நிகழ்ச்சிகளில் தங்கள் குழு நிகழ்ச்சியை நடத்தவிருப்பதாகவும்
அஜய் தெரிவித்தார். ‘ஸ்டக்காட்டோ’ இசைக் குழுவில் 12 பேர் இடம் பெற்றிருக்கிறார்கள்.