ரியோ+20 உச்சி மாநாட்டின் தீர்மானங்களைச் செயல்படுத்த உலகத் தலைவர்களுக்கு
பான் கி மூன் அழைப்பு
ஜூன்23,2012. உலகின் அனைத்து மக்களும் நல்ல பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் சமூக வளமையை
அடையும்பொருட்டு ரியோ+20 உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை உலகத் தலைவர்கள்
செயல்படுத்துமாறு பான் கி மூன் கேட்டுக் கொண்டார். மாநாட்டின் உரைகள் முடிந்து விட்டன,
இப்பொழுது வேலைகள் தொடங்கப்பட வேண்டும் என்று இந்த மூன்று நாள் மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில்
கூறினார் பான் கி மூன். சுமார் 100 நாடுகள் மற்றும் அரசுகளின் தலைவர்கள் உட்பட சுமார்
40 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இந்த மாநாட்டில், உலகின் உறுதியான வளர்ச்சிக்கென அரசுகளும்
தொழிற்சாலைகளும், வணிகர்களும், நிதி அமைப்புகளும், தனியாட்களும் சுமார் 51,300 கோடி டாலர்
நிதியுதவிக்கு உறுதியளித்துள்ளனர். பத்துக்கோடி மரங்களை நடுதல், ஆப்ரிக்காவில் பசுமைப்
பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கு 5,000 பெண்கள் அமைப்புகளுக்கு உதவுதல், 8 இலட்சம் டன்
polyvinyl chloride ஐ மறுசுழற்சி செய்தல் போன்ற திட்டங்களுக்கு நாடுகள் உதவ முன்வந்துள்ளன.
ஊடகங்கள் வழியாக 5 கோடிக்கு மேற்பட்ட மக்கள் இதில் கலந்து கொண்டனர்.