இந்தோனேசியாவில் ஊழலை ஒழிப்பதற்குத் திருஅவைத் தலைவர்களும் பொதுநிலையினர் இயக்கங்களும்
முயற்சி
ஜூன்22,2012. இந்தோனேசியாவில் இடம்பெறும் ஊழலை ஒழிப்பது குறித்த நடவடிக்கை ஒன்றை அந்நாட்டுத்
திருஅவைத் தலைவர்களும் பொதுநிலையினர் இயக்கங்களும் தொடங்கியுள்ளன. இந்தோனேசிய ஆயர்
பேரவையும் Bhumiksara நிறுவனமும் இணைந்து நடத்திய மூன்று நாள் கருத்தரங்கில் கலந்து கொண்ட
குருக்கள், வல்லுனர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பலர் நாட்டில் ஊழலை ஒழிப்பது குறித்த
பரிந்துரைகளை முன்வைத்தனர். நேர்மை மற்றும் ஒளிவு மறைவில்லாத தன்மையை அடிப்படையாகக்
கொண்ட பொது நிர்வாகம் உட்பட நல்ல பழக்கவழக்கங்கள் தேவை என்பது இக்கருத்தரங்கில் பரிந்துரைக்கப்பட்டது. ஆசியாவில்
ஊழல் மிகக் கடுமையான பிரச்சனைகளில் ஒன்றாக இருந்து வருகின்றது. இந்தோனேசியா, கம்போடியா,
சீனா, வியட்நாம், பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகளில் இந்தப் பிரச்சனை பொதுவான துறைகளையும்,
பெரிய நிறுவனங்களையும் பாதிப்பதோடு சாதாரண மக்களிலும் காணப்படுகின்றது என்று ஊடகங்கள்
கூறுகின்றன.