ஜூன்19,2012. நாம்
வாழுகின்ற இந்தப் பூமியில் ஒவ்வொரு நாளும் 2,500 முதல் 10,000 சிறிய நிலஅதிர்வுகள் ஏற்படுகின்றன
என்று அறிவியலாளர் சொல்கின்றனர். 1989ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி சான் பிரான்சிஸ்கோவில்
ஏற்பட்ட நிலநடுக்கத்தை இன்னும் பலரால் மறக்க முடியவில்லை. ஏன் 1812ம் ஆண்டு தென் மிசவுரியைத்
தாக்கிய நிலநடுக்கம் Mississippi நதியின் ஓட்டப்பாதையையே மாற்றியது. 1976ம் ஆண்டில் சீனாவில்
ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் நான்கு இலட்சம் பேர் இறந்தனர். 2004ம் ஆண்டு டிசம்பர்
26ம் தேதி பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி ஏறக்குறைய 30 மீட்டர் உயரத்துக்கு அலைகளை
எழுப்பி 14 நாடுகளில் 2 இலட்சத்து 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களின் உயிரைக் காவு கொண்டது.
2011ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியும் நிலஅதிர்வும் ஜப்பானில்
மட்டுமல்ல, பல நாடுகளில் அணுஉலைகளை மூடுவதற்குத் தூண்டியுள்ளன. கடந்த மாதத்தில்கூட வட
இத்தாலியில் 2 தடவைகள் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. கடந்த வாரத்தில்கtட இலங்கையின் கொழும்புவில்
இலேசான நிலநடுக்கம். இத்தகைய இயற்கையின் கடும் சீற்றங்கள் நினைத்துப் பார்க்காத நேரத்தில்,
நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு கண்சிமிட்டும் நேரத்தில் திடீரென நடக்கும்போது மனிதர்
நிலை தடுமாறுகின்றனர். அந்த நேரத்தில் கடவுளே காப்பாத்து, மாதாவே காப்பாத்து என்றுதான்
உடனடியாகக் கத்துகின்றனர். இந்தப் பேரிடர்களின்போது நம் ஒவ்வொருவர் மனத்திலும் கடவுள்
பற்றிய பயம், அச்சம், நடுக்கம் வந்து விடுகிறது.. ஏன் கடந்த வாரத்தில் உரோமையில் ஒருவருக்குத்
திடீரெனத் தாங்க முடியாத நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் மருத்துவர்கள் அவசர சிகிச்சையைத்
தொடங்கிய அந்த நொடிப்பொழுதில் மீண்டும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட உடனே சுற்றி நின்ற
அத்தனை மருத்துவர்களும் ஓ தியோ, ஓ தியோ அதாவது ஓ கடவுளே ஓ கடவுளே என்றுதான் பதட்டத்துடன்
கத்தியிருக்கின்றனர். மனிதரின் அபாரத்திறமைக்குச் சவால்விடும் துயரங்கள் நேரிடும்போதெல்லாம்
கடவுள் பற்றிய அச்சம் அதிகமாக வருகின்றது. இன்று நாம் தியானிக்கும் திருப்பாடல் 128 கடவுளுக்கு
அஞ்சி வாழ்வோருக்கு கிடைக்கும் ஆசி பற்றிச் சொல்கிறது. 6 வசனங்கள் கொண்ட இந்தச் சிறிய
பாடலில் 2 தடவைகள்,
ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறு பெற்றோர்
எனச் சொல்லப்பட்டுள்ளது.
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் கி.மு.538 முதல் 530 வரை புகழ்பெற்ற மன்னராக விளங்கிய பாரசீகப்
பேரரசர் சைரஸ், பாபிலோனிய நாட்டைக் கைப்பற்றியதும் அங்கு அடிமைகளாய் வாழ்ந்து வந்த இஸ்ரயேல்
மக்கள் அவர்களுடைய தாய்நாட்டுக்குத் திரும்பிச் செல்ல அனுமதித்தார். அவ்வாறு மகிழ்ச்சியோடு
தாயகம் திரும்பிய இஸ்ரயேலர், தங்களது நாட்டில் அமைதியையும் செழுமையையும் வளமையையும் ஆசிகளையும்
எதிர்பார்த்தனர். ஆனால் எதிர்பார்த்தது நெடுங்காலமாக நிகழவே இல்லை. இதனால் அம்மக்கள்
மனத்துயரத்தில் இருந்தனர். எனவே இம்மக்களுக்குத் திருப்பாடல் ஆசிரியர் அறிவுரை கூறுகிறார்.
அந்தத் திருப்பாடல்தான் 128. அந்த ஆசிரியரின் அறிவுரை எவ்வாறு இருந்ததெனில் ....
ஆண்டவருக்கு
அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் உழைப்பின் பயனை உண்பார்கள்! நற்பேறும் நலமும் பெறுவார்கள்
அவரது இல்லத்தில் அவர்தம் துணைவியார் கனிதரும் திராட்சைக்கொடிபோல் இருப்பார்; உண்ணும்
இடத்தில் அவர்தம் பிள்ளைகள் ஒலிவக் கன்றுகளைப் போல் சூழ்ந்திருப்பர். அவர்கள் பிள்ளைகளின்
பிள்ளைகளைக் காண்பார்கள்!
இறைவனிடம் பற்றுறுதி கொண்டு அவரது கட்டளைக்குக் கீழ்ப்படிந்து
அக்கட்டளைகளின்படி வாழ்க்கையை நடத்துவோர்க்கு வாழ்வும் வழியும் வளமையும் கிட்டும். ஆண்டவருக்கு
அஞ்சி நடக்கும்போது அதன்பலன்களை மறுவுலகில் அல்ல, இவ்வுலகிலேயே அனுபவிக்கலாம். ஆண்டவருக்கு
அஞ்சி நடக்கும்போது, உழைப்பின் பலனில் திருப்தி கிடைக்கும். உழைப்பின் பலனில் வெற்றி
அனுபவம் கிடைக்கும் என்று இந்தத் திருப்பாடலின் 2வது சொற்றொடர் சொல்கின்றது. தன் கையே
தனக்குதவி என்ற முறையில் நெற்றி வியர்வையை நிலத்தில் சிந்தி உழைத்து, அதன் பயனை நல்லோர்
அனுபவிப்பார்கள். ஆனால் தீயோரோ கடுமையாக உழைத்தாலும் அவர்களுக்குப் பலன் கிட்டாது. லேவியர்
புத்தகத்தில் இவ்வாறு வாசிக்கிறோம் (26,15-16). ஆண்டவர் அச்சுறுத்துகிறார்
என்
நியமங்களைத் தள்ளிவிட்டு என் கட்டளைகளை வெறுத்து என் உடன்படிக்கையை முறித்து விட்டால்,
திகிலையும் என்புருக்கி நோயையும், காய்ச்சலையும் வரப்பண்ணுவேன். நீங்கள் பயனில்லாமல்
விதை விதைப்பீர்கள். எதிரிகள் பலனைத் தின்பார்கள்.
கடவுள் கட்டளைகளை மீறி அவருக்கு
அஞ்சி நடக்காத தீயோரைப் பார்த்து ஆமோஸ் இறைவாக்கினரும் (5,11)
நீங்கள் ஏழைகளை
நசுக்கி, அவர்களிடம் தானிய வரியாக வாங்கியதைக் கொண்டு நன்கு செதுக்கிய கற்களால் வீடு
கட்டினீர்கள். அந்த வீடுகளில் நீங்கள் வாழப் போவதில்லை. அருமையான திராட்சைத் தோட்டங்களை
அமைத்தீர்கள். அவை தரும் திராட்சை இரசத்தை நீங்கள் குடிக்கப் போவதில்லை.
என
எச்சரிக்கிறார் எனவே ஆண்டவருக்கு அஞ்சி நடக்காதோர் உழைப்பின் பலனை அனுபவிக்க மாட்டார்கள்
என்று வேதம் சொல்கிறது. ஆனால், ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும்போது அவரின் ஆசி, இவ்வுலகம்
முக்கியம் எனக் கருதும் பொருள்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவரது ஆசி, நல்ல
குடும்பமாக, நல்ல கணவன், நல்ல மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என்பதிலும் வெளிப்படும்.
இந்த ஆசிதான் இந்தத் திருப்பாடலில் முக்கியமாக அறிவுறுத்தபட்டுள்ளது. அக்காலத்திய இஸ்ரயேல்
சமுதாயத்தில் பிள்ளைப்பேறு கடவுளின் மாபெரும் கொடையாகக் நோக்கப்பட்டது. ஆபிரகாம், ஈசாக்,
யாக்கோபு போன்றோரின் வாழ்க்கையில் இது தெளிவாகத் தெரிகிறது. இயேசுவின் பிறப்பு குறித்து
வானதூதர் அன்னை மரியாவுக்கு அறிவித்த போது எலிசபெத் பற்றிச் சொல்கிறார்....
கருவுற
இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம்
என்று சொன்னார். மேலும்,
கடவுள் மனிதனுக்கு அளித்த முதல் அமைப்பு குடும்பமே. அவர் ஆதாமைப் படைத்தவுடன் சொன்ன முதல்
கூற்றே
மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று (தொ.நூல்2 :18)
என்பதே. நீதிமொழிகள்
புத்தகத்தில், ஆண் மகனுக்குப் பெண்மீதுள்ள நாட்டம் எனக்கு வியப்பைத் தருகின்றது (30,19)
என்றும் விவேகமுள்ள மனைவி ஆண்டவர் அளிக்கும் கொடை (19,14) என்றும் சொல்லப்பட்டுள்ளது.
குழந்தைகளைப் பெற்றெடுக்கும் ஆண்பெண் ஐக்கியம் கடவுளின் ஆசியாகும். திருப்பாடல் 127,
3,4ல்
பிள்ளைகள் ஆண்டவர் அருளும் செல்வம். மக்கட்பேறு அவர் அளிக்கும் பரிசு. இளமையில்
ஒருவருக்குப் பிறக்கும் மைந்தர் வீரரின் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பானவர்
என்று
கூறுகிறது. ஆண்டவருக்குப் பயந்து அவர் கட்டளைகளின்படி வாழ்வோருக்கு மக்கட்செல்வங்களுக்கும்
குறை இருக்காது. புனித பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் மடலில், (3,4)
ஒரு
கணவர் தமது சொந்தக் குடும்பத்தை நல்ல முறையில் நடத்தி தம் பிள்ளைகள் பணிவுடனும் மிகுந்த
கண்ணியத்துடனும் வளர ஆவன செய்பவராக இருக்க வேண்டும்
திருப்பாடல் 128ம் ஆண்டவருக்கு
அஞ்சி நடக்கும் ஆடவர் ஆசி பெற்றவராய் இருப்பார். ஆண்டவர் சீயோனிலிருந்து அவருக்கு ஆசி
வழங்குவாராக! உம் வாழ்நாளெல்லாம் நீர் எருசலேமின் நல்வாழ்வைக் காணும்படி செய்வாராக!
என்று
சொல்கிறது. அன்பர்களே, ஒரு நல்ல குடும்பத்தின்மீது ஆண்டவரது ஆசி அபரிமிதமாகப் பொழியப்படுகிறது.
ஒரு நல்ல குடும்பத்தில் ஒரு தந்தை தாய் பிள்ளைகள் எத்தகைய குணநலன்களைக் கொண்டிருக்க வேண்டும்
என்பதற்கு விவிலியத்தில் பல எடுத்துக்காட்டுக்களைச் சொல்லலாம். மக்கட்செல்வம் இறைவனின்
ஆசி. எனவே குழந்தைகளில் நாம் இறைவனைக் காண வேண்டும். ஆனால் இன்றைய மேலைநாட்டு நுகர்வுக்
கலாச்சாரத்தில் குழந்தைகள் செல்வங்களாக இல்லாமல், செலவுப் பொருள்களாகப் பார்க்கப்படுகிறார்கள்.
நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளை அன்பொழுக அழைக்கும் மனிதர், நிலையான குடும்பம் அமைத்து
பிள்ளைகளைப் பெற்றெடுத்து வாழ முன்வருவதில்லை. திருமண முறிவுகள் வெகு எளிதாக நடக்கின்றன.
தான் என்ற வட்டத்துக்குள் தன்னை முடக்கி வாழ்வோருக்குப் பொறுமை, சகிப்பு, விட்டுக்கொடுத்தல்
போன்ற பண்புகள் கடினமாக இருக்கின்றன. ஓர் ஆணும் ஒரு பெண்ணும் திருமண உறவுடன் வாழும் அமைப்பையே
இறைவன் உருவாக்கினார். இதுவே இயற்கையான குடும்ப அமைப்பு. எனவே திருப்பாடல் 128 ஐ தியானிக்கும்
நாம் சமுதாயத்தில் நல்ல குடும்பங்கள் அமைக்கப்பட செபிப்போம்.
அந்த வீட்டிலிருந்து
ஒருநாள் வானொலியின் சத்தம் திடீரென்று மிக சப்தமாகக் கேட்டது. எனவே அந்த வீட்டுச் சிறுமியிடம்
ஒருவர், பாப்பா, எதற்காக உங்கள் வீட்டில் வானொலியை இவ்வளவு சப்தமாக வைத்துக் கேட்கிறீர்கள்,
அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சி உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா? என்று கேட்டார். அதற்கு
அந்தச் சிறுமி, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. என் அப்பாவுக்கும் என் அம்மாவுக்கும் இடையே
பெரிய வாக்குவாதம் நடக்கும் போது அந்த சத்தம் வெளியே கேட்கக் கூடாது என்பதற்காகச் சத்தத்தைக்
கூட்டுவார்கள் என்று சொன்னாள். வேறொரு வீட்டில் ஒரு சிறுமி தனது பெற்றோரிடம், நீங்கள்
எப்போது சண்டையை நிறுத்தப் போகிறீர்கள். அந்த நேரம் தெரிந்தால் அதற்கேற்றாற்போல் நான்
வீட்டுக்கு வருகிறேன். அதற்குப் பிறகாவது என்னைத் தேர்வுக்குப் படிக்க அனுமதியுங்கள்
என்று சொன்னாளாம். ஆம். கணவன் மனைவிக்கிடையே வரும் சண்டை குழந்தைகளைப் பலவழிகளில் பாதிக்கும்
என்பதைப் பெற்றோர் புரிந்திருக்க வேண்டும்.
பெற்றோரே, ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும்
போது அவர் நிச்சயம் உங்களை வழிநடத்துகிறார் என்பதில் சந்தேகமே இருக்கக் கூடாது. அரவிந்தர்
சொல்கிறார் - நீ உன்னை ஒரு பக்கம் இறைவனது உண்மைக்குத் திறந்து கொண்டு, மற்றொரு பக்கம்
பகைச் சக்திகளுக்குக் கதவைத் திறந்து கொண்டே இருந்தால் இறையருள் உன்னிடம் தங்கும் என்று
எதிர்ப்பார்ப்பது வீணாகும். உனது நேர்மையும், சரணடைதலும் முழுமையானதாகவும், உண்மையானதாகவும்
இருக்கட்டும். உன்னை இறைவனுக்குக் கொடுக்கும்போது கோரிக்கை, நிபந்தனை, பிடித்தம் என ஏதுமின்றி
முற்றிலுமாகக் கொடுத்துவிடு என்று.
ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர்
நற்பேறும் நலமும் பெறுவார்கள்