பதிமூன்றாம் ஆயர் மாமன்றத்தில் விவாதிக்கப்படவிருக்கும் கருத்துக்கள் அடங்கிய நூல்
வெளியீடு
ஜூன்,19,2012. கிறிஸ்துவ விசுவாசப் பாரம்பரியங்களில் முறிவு இல்லாத வண்ணம் இயேசுவின்
நற்செய்தியை இன்றைய உலகிற்கு எடுத்துரைக்கும் முயற்சியே புதிய நற்செய்திப் பணியாகும்
என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார். வருகிற அக்டோபர் மாதம் 7ம் தேதி முதல்
28ம் தேதி முடிய வத்திக்கானில் நடைபெறவிருக்கும் பதிமூன்றாம் ஆயர் மாமன்றத்தில் விவாதிக்கப்படவிருக்கும்
கருத்துக்கள் அடங்கிய நூலை இச்செவ்வாயன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிட்ட ஆயர்
மாமன்ற பொதுச்செயலர் பேராயர் Nikola Eterovic, இவ்வாறு கூறினார். இந்த நூலை உருவாக்க
உலகெங்கும் பரவியுள்ள 114 ஆயர் பேரவைகள், 13 கீழைரீதி ஆயர் பேரவைகள், மற்றும் 26 திருப்பீட
அவைகள் இணைந்து செயல்பட்டன என்று பேராயர் Eterovic விளக்கம் அளித்தார். இந்நூலில்
காணப்படும் நான்கு பகுதிகள் குறித்தும் பேசிய பேராயர் Eterovic, இரண்டாம் வத்திக்கான்
பொதுச் சங்கம் கூடியதன் 50ம் ஆண்டு நிறைவையும், கத்தோலிக்கத் திருஅவையின் மறைகல்வி நூல்
வெளியானதன் 20ம் ஆண்டு நிறைவையும் சிறப்பிக்கும் விதமாக, 13ம் ஆயர் மாமன்றம் அக்டோபர்
மாதம் நடைபெறும் என்று தெரிவித்தார்.