சிரியாவின் கிரேக்கக் கத்தோலிக்க ஆலயத்தை இஸ்லாமியத் தீவிரவாதக் கும்பல் கைப்பற்றியுள்ளது
ஜூன்,18,2012. சிரியாவின் Qusayr எனும் நகரில் உள்ள புனித எலியாஸ் கிரேக்கக் கத்தோலிக்க
ஆலயத்தை சிரிய அரசுக்கு எதிராகச் செயல்படும் Salafi என்ற இஸ்லாமியத் தீவிரவாதக் கும்பல்
ஒன்று கைப்பற்றியுள்ளது. இக்கும்பலைச் சேர்ந்தவர்கள் ஆலயத்தில் நுழைந்து, ஆலய மணியை
அடித்து, அங்குள்ள பொருட்களைச் சேதப்படுத்தி, கத்தோலிக்க மறைக்கு எதிரான தங்கள் வெறுப்பை
வெளிப்படுத்தினர் என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறியது. தாங்கள் நடத்துவது ஒரு
சமயப் போர் என்று இத்தீவிரவாதக் கும்பல் அந்நகரில் அறிவித்து வருவதாகவும், இக்கும்பலின்
அராஜகத்திற்குப் பயந்து அந்நகரில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் ஓடிப்போவதாகவும்
இச்செய்தி மேலும் கூறுகிறது. புனிதத் தலங்களுக்கு எதிராக இஸ்லாமியத் தீவிரவாதக் கும்பல்
மேற்கொண்டுள்ள செயல்களுக்கு தலத்திருஅவை தன் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்து வருகிறது.