அமெரிக்கத் திருஅவை சந்தித்து வரும் பிரச்சனைகள், விசுவாசத்தைக் காக்க விடுக்கப்பட்டுள்ள
ஓர் அழைப்பு - திருப்பீடத் தூதர்
ஜூன்,14,2012. அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள தலத் திருஅவை தற்போது சந்தித்து வரும் பிரச்சனைகள்,
விசுவாசத்தைக் காக்கும் முயற்சிகளில் அனைவரும் இணைந்து வருவதற்கு விடுக்கப்பட்டுள்ள ஓர்
அழைப்பு என்று அமெரிக்க ஐக்கிய நாட்டில் பணிபுரியும் திருப்பீடத் தூதர் பேராயர் Carlo
Maria Viganò, கூறினார். அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையின் ஆண்டுக் கூட்டம் இச்செவ்வாயன்று
Atlanta நகரில் துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தில் துவக்க உரையாற்றிய
பேராயர் Viganò, தற்போதைய பிரச்சனைகளைச் சவால்களாக நோக்கும்படி ஆயர்களுக்கு அழைப்பு விடுத்தார். அமெரிக்க
ஐக்கிய நாட்டின் கத்தோலிக்கத் திருஅவை வரலாற்றில் தற்போதைய காலக்கட்டம் மிகவும் சவால்
நிறைந்த ஒரு காலம் என்று கூறிய பேராயர் Viganò, மனசாட்சிக்கும், மத உரிமைகளுக்கும் எதிராகத்
தற்போது எழுந்துள்ள பிரச்சனைகளை அமெரிக்கத் திருஅவை சரியான வழியில் சந்திக்கும் என்ற
தன் நம்பிக்கையையும் வெளியிட்டார். பிரிவுகளை உருவாக்குவது எந்த ஒரு பிரச்சனையிலும்
இவ்வுலகம் மேற்கொள்ளும் வழி என்பதை எடுத்துரைத்த பேராயர் Viganò, ஒன்றிணைந்து பிரச்சனைகளுக்குத்
தீர்வு காண்பது அமெரிக்கத் தலத் திருஅவைக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய சவால் என்பதை
வலியுறுத்தினார்.