அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிற்றாலயத்தை போலந்து
நாட்டில் அர்ச்சித்தார் திருப்பீடச் செயலர்
ஜூன்,13,2012. அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் செபம் நிறைந்ததோர் வாழ்வை மேற்கொண்ட
மேலான மனிதர் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்தோனே கூறினார். போலந்து
நாட்டில் தனது ஆறுநாள் பயணத்தை இப்புதனன்று நிறைவு செய்த கர்தினால் பெர்தோனே, Gdańsk-Zaspa
எனுமிடத்தில் அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிற்றாலயத்தை
அர்ச்சித்து, திறந்து வைத்தபோது இவ்வாறு கூறினார். திருநற்கருணை ஒவ்வொருவரது வாழ்விலும்
பெறவேண்டிய மையமான இடத்தை, தன் சுற்றுமடல்களிலும், மறையுரைகளிலும் அருளாளர் இரண்டாம்
ஜான்பால் கூறிவந்தார் என்பதை சுட்டிக்காட்டிய கர்தினால் பெர்தோனே, திருநற்கருணையையும்,
நம் வாழ்வையும் இணைக்கும் ஒரு பாலமாக ஆராதனை விளங்குகிறது என்று கூறினார். போலந்து
நாட்டில் பிறந்த அருளாளர் இரண்டாம் ஜான்பால் அவர்கள் பெயரால் அர்ப்பணிக்கப்பட்ட இந்தப்
புனித இடத்திற்கு வரும் அனைவரும் இறையாசீரை நிறைவாகப் பெற்றுத் திரும்பவேண்டும் என்ற
தன் ஆவலையும் கர்தினால் பெர்தோனே வெளியிட்டார்.