நைஜீரியாவில் இரண்டு ஆலயங்கள் தாக்கப்பட்டன, 8 பேர் இறந்துள்ளனர். 50க்கும்
அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
ஜூன்11,2012. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள ஜோஸ் நகரின் ஆலயத்துக்கு வெளியே
இஞ்ஞாயிறன்று வாகனத் தற்கொலை குண்டுவைப்பு தாக்குதல் நடத்தப்பட்ட அதேவேளை, அந்நாட்டின்
வடகிழக்குப் பகுதியில் மற்றுமோர் ஆலயத்தில் துப்பாக்கி ஏந்திய மனிதர் தாக்குதலை நடத்தியிருக்கின்றனர். அல்
கெய்தா குழுவோடு தொடர்புடையதாகச் சொல்லப்படும் Boko Haram என்ற பயங்கரவாதக் குழு இத்தாக்குதல்களை
நடத்தியிருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. அந்நாட்டின் மத்திய மர்றும் வடக்குப் பகுதிகளில்
வாழும் கிறிஸ்தவ சமூகங்களுக்கு இடையே வன்முறையை விதைத்து வருகிறது இக்குழு. இத்தாக்குதல்கள்
குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த ஜோஸ் பேராயர் Paul Kaigama, Boko Haram
மற்றும் இது போன்ற அமைப்புகள் உரையாடலில் ஆர்வம் காட்டுவதில்லை என்று குறை கூறினார்.
அக்குழுக்கள் கொலை செய்கின்றன, அழிக்கின்றன, எரிக்கின்றன, இவை மிகவும் தொந்தரவாக இருந்து
அதிகமான பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன என்றும் பேராயர் தெரிவித்தார். இஞ்ஞாயிறன்று
இரண்டு கிறிஸ்தவ ஆலயங்கள் குண்டு வைத்து தாக்கப்பட்டதில் 8 பேர் இறந்துள்ளனர் மற்றும்
50க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். ஒரு வாரத்துக்கு முன்னர் Bauchi நகரில் இடம்பெற்ற
தாக்குதல்களில் 12 பேர் இறந்தனர்.