2012-06-06 15:38:12

புனித ஜான் லாத்தரன் பசிலிக்காப் பேராலயத்தில் இவ்வியாழனன்று மாலை திருத்தந்தை நிறைவேற்றவிருக்கும் திருப்பலிக்கு அழைப்பு


ஜூன்,06,2012. மனித குலத்திற்கு இறைவன் வழங்கியுள்ள ஒப்பற்ற கொடையாகிய திருநற்கருணையின் புகழை மக்கள் அறிந்துகொள்ளவும், திருநற்கருணையில் நாம் கொண்டுள்ள விசுவாசத்தைத் திருத்தந்தையுடன் இணைந்து வெளிப்படுத்தவும் நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று கர்தினால் Agostino Vallini, கூறினார்.
உரோம் மறைமாவட்டத்தின் அனைத்து மக்களையும், குருக்களையும், புனித ஜான் லாத்தரன் பசிலிக்காப் பேராலயத்தில் இவ்வியாழனன்று மாலை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் நிறைவேற்றவிருக்கும் திருப்பலிக்கு வருமாறு அழைப்பு விடுத்த கர்தினால் Vallini, இவ்வாறு கூறினார்.
அண்மைக் காலங்களில் திருப்பீடம் சந்தித்து வரும் சவால்கள் நிறைந்த கேள்விகளை திருநற்கருணை நாதருக்கு முன்பாக எழுப்பி, அவர் வழியாக மக்களின் விசுவாசத்தைத் தூண்டும் ஒரு தருணமாக இது அமைய நாம் முயற்சிகள் மேற்கொள்வோம் என்று கர்தினால் Vallini தன் அழைப்பில் எடுத்துரைத்தார்.
இயேசு கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தம் என்ற மறையுண்மையில் மக்களின் விசுவாசத்தை உறுதி செய்யும் வண்ணம் 1264ம் ஆண்டு திருத்தந்தை 4ம் உர்பான் என்பவரால் கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தத் திருவிழா நிறுவப்பட்டது என்று உரோம் மறைமாவட்ட செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.