2012-06-06 15:35:30

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


ஜூன் 06, 2012. இத்தாலியில் வெயில் காலம் துவங்கிவிட்டாலும், திருத்தந்தையின் இவ்வார புதன் பொதுமறைபோதகம் தூய பேதுரு பேராலய வளாகத்திலேயே இடம்பெற்றது. உரோம் நகருக்கு வரும் திருப்பயணிகளின் கூட்டம் அதிகமாக இருப்பதால் திருத்தந்தையின் பொதுமறைபோதகத்தில் அனைவரும் பங்குகொள்ள வாய்ப்பளிக்கும் வண்ணம் இந்த ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது. நம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தன் இவ்வார புதன் பொதுமறைபோதகத்தில், கடந்த வார இறுதியில் மிலான் நகரில் இடம்பெற்ற அனைத்துலகக் குடும்ப மாநாடு குறித்துத் தன் கருத்துக்களை வெளியிட்டார்.
குடும்பம் குறித்த ஏழாவது உலக மாநாட்டையொட்டி கடந்தவார இறுதியில் நான் மிலானுக்குப் பயணம் மேற்கொண்டேன். 'குடும்பம் : பணியும் கொண்டாட்டமும்' என்பதை மையக்கருத்தாகக் கொண்டிருந்தது இம்மாநாடு. சமூக முதன்மைக் கூறாகவும், இல்லத் திருஅவையாகவும், வாழ்வுக் காப்பகமாகவும், திருமணத்தை அடிப்படையாகக் கொண்ட அன்பு ஒன்றிப்பாகவும் இருக்கும் குடும்பத்தின் வளஞ்செறிந்த பல்வகைத் தனித்தன்மைகளுக்கு இந்த மகிழ்ச்சிநிறை மாநாடு, ஓர் எழுச்சிமிகு சாட்சியாக இருந்தது. கடவுளால் வழங்கப்படும் அன்பின் அழைப்பை கண்டுகொள்வதும், மற்றவர்களுடன் உறவில் நுழைவதும், இணக்கமாக ஒன்றிணைந்து நாம் வாழ்வதும் குடும்பங்களில்தான். ஞாயிற்றுக்கிழமைகளில்கூட குடும்ப அங்கத்தினர்கள் ஒன்றிணைந்து வருவதற்கான நேரம் கிட்டாமை உட்பட, இன்றையக் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள் குறித்து ஆழ்ந்து சிந்திப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்குவதாக மிலான் மாநாட்டுச் சாட்சியக் கலந்துரையாடல் இருந்தது. இவ்வுலகை மாற்றவல்ல ஒரே வழியான தெய்வீக அன்பைக் கொண்டாடும் பொருட்டு, தலத்திருஅவைச் சமூகங்கள் அனைத்தும் குடும்பங்களைப் போல் மேலும் மாறவேண்டும் என இம்மாநாட்டின் திருப்பலியின் இறுதியில் நான் ஊக்கமளித்தேன். அனைத்துலக்க் குடும்பங்களின் இந்தச் சந்திப்பு, 'குடும்ப நற்செய்தியை' மேலும் முன்னோக்கி எடுத்துச் செல்வதுடன், நம் சமூகங்களின் வருங்காலமாக இருக்கும் குடும்பங்களின் முக்கியத்துவம் குறித்த கவன ஈர்ப்பை வழங்குவதாக.
இவ்வாறு தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.