இங்கிலாந்து அரசியின் வைர விழாவையொட்டி திருத்தந்தை அனுப்பிய வாழ்த்துச் செய்தி
ஜூன்,06,2012. ஒரு கிறிஸ்தவ அரசுத்தலைவர் கொண்டிருக்கவேண்டிய பல நற்பண்புகளுடன் உண்மைச்
சுதந்திரம், நீதி, மக்கள்அரசு ஆகிய விழுமியங்களின் கொள்கைகளை முன்னிறுத்தியவர் இங்கிலாந்து
அரசி இரண்டாம் எலிசபெத் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார். இம்மாதம் 2ம்
தேதி சனிக்கிழமை முதல் இச்செவ்வாய் முடிய இலண்டன் மாநகரிலும், இங்கிலாந்திலும் நடைபெற்ற
இரண்டாம் எலிசபெத் அரசியின் வைர விழாவையொட்டி தன் வாழ்த்துச் செய்தியை அனுப்பியத் திருத்தந்தை,
இவ்வாறு கூறினார். 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தான் இங்கிலாந்து சென்ற வேளையில்
எலிசபெத் அரசி தனக்கு அளித்த வரவேற்பினை நினைவிற்கொண்டு அவருக்குத் தன் நன்றியை மீண்டும்
ஒருமுறை தன் வாழ்த்துச் செய்தியில் எடுத்துரைத்தார் திருத்தந்தை. பல்வேறு மதங்களுக்கிடையே
மதிப்பை உருவாக்குவதிலும், கத்தோலிக்கத் திருஅவைக்கும் பிற சபைகளுக்கும் இடையே ஆழமான
புரிதலை வளர்ப்பதிலும் எலிசபெத் அரசி காட்டிவரும் அக்கறையை தான் பாராட்டுவதாகத் திருத்தந்தை
கூறினார். அரசியையும், அவரது குடும்பத்தையும் இறைவன் தன் பாதுகாப்பில் வழிநடத்த தன்
செபங்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக திருத்தந்தை தன் வாழ்த்துச் செய்தியின்
இறுதியில் கூறியுள்ளார்.