2012-06-06 15:37:17

'அஞ்சாதீர்கள்' என்ற முக்கிய செய்தியை மிலான் நகர மக்களுக்கும், உலக மக்களுக்கும் திருத்தந்தை விடுத்துள்ளார்


ஜூன்,06,2012. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் 'அஞ்சாதீர்கள்' என்ற முக்கிய செய்தியை மிலான் நகர மக்களுக்கும், உலக மக்களுக்கும் விடுத்துள்ளார் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சிசியோ பெர்த்தோனே கூறினார்.
ஜூன் 3 இஞ்ஞாயிறன்று மிலான் நகரில் நிறைவுபெற்ற அகில உலக குடும்ப மாநாட்டின் இறுதி மூன்று நாட்களின் நிகழ்வுகளில் திருத்தந்தை கலந்து கொண்டபோது அங்கு அவருக்குக் கிடைத்த வரவேற்பைக் குறித்து TG1 என்ற இத்தாலிய தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியொன்றில் கர்தினால் பெர்த்தோனே இவ்வாறு கூறினார்.
அண்மையக் காலங்களில் திருத்தந்தையின் தனிப்பட்டக் கடிதங்கள் ஊடகங்களில் வெளியானது பற்றி வத்திக்கானில் வழக்குகள் நடந்து வரும் வேளையில், திருத்தந்தை மேற்கொண்ட இந்த மேய்ப்புப்பணி பயணத்தில் அவருக்கு மக்களால் வழங்கப்பட்ட வரவேற்பு, திருத்தந்தை மீது மக்கள் கொண்டுள்ள பெரும் மதிப்பை எடுத்துக் காட்டுகிறது என்று கர்தினால் சுட்டிக்காட்டினார்.
உலகின் பல பகுதிகளில் நிலவி வரும் வன்முறைகள், திருஅவையில் காணப்படும் பிரச்சனைகள் மத்தியிலும் மக்கள் மனம் தளராது நம்பிக்கை கொண்டிருக்கவேண்டும் என்ற முக்கியச் செய்தியை மிலான் நகரில் திருஅவை தலைவர்கள், இளையோர், பொது மக்கள் அனைவருக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் திருத்தந்தை வழங்கினார் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் பெர்த்தோனே எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.