பூமிகோளத்தைப் பாதுகாக்கும் வீரர்கள் என்ற விருதுக்கு ஆறுபேர் தெரிவு - ஐ.நா.அமைப்பு
ஜூன்,05,2012. இம்மாதம் பிரேசில் நாட்டின் Rio de Janeiroவில் நடைபெறவிருக்கும் Rio+20
உலக மாநாட்டை முன்னிட்டு, 2012ம் ஆண்டு பூமிகோளத்தைப் பாதுகாக்கும் வீரர்கள் என்ற விருதுக்கு
ஆறுபேரைத் தெரிவு செய்துள்ளது ஐ.நா.அமைப்பு. மங்கோலியாவின் அரசுத் தலைவர் Tsakhia
Elbegdorj, பிரேசில் நாட்டு வங்கி இயக்குனர் Fábio C. Barbosa, ஐக்கிய அரபு அரசுகளில்
மறுசுழற்சி சக்திகளைப் பயன்படுத்தும் தொழிலதிபர் Sultan Ahmed Al Jaber, சுவிட்சர்லாந்து
நாட்டில் விமானங்களை இயக்குவதில் புலமைபெற்ற ஆய்வாளர் Bertrand Piccard, Dutch நாட்டின்
அறிவியலாளர் Sander van der Leeuw கென்யாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள
Samson Parashina ஆகியோர் இந்தப் புகழ்பெற்ற விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சுற்றுச்சூழலைப்
பாதுகாப்பதில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் அது சமுதாயக் குழுக்களுக்கும், வர்த்தகத்திற்கும்,
நாட்டிற்கும் பயன்தரும் என்பதற்கு இந்த ஆறு பேரும் சான்றுகள் என்று ஐ.நா.சுற்றுச்சூழல்
பாதுகாப்பு அமைப்பின் இயக்குனர் Achim Steiner கூறினார். சுற்றுச்சூழலை பாதிக்காத
வண்ணம் சுத்தமான எரிசக்திகளின் பயன்பாடு, பசுமையை வளர்க்கும் முயற்சிகள் ஆகிய செயல்பாடுகளில்
ஈடுபட்ட இவர்களைப்போல பலரும் முன்வந்தால், இந்த உலகம் பாதுகாக்கப்படும் என்று ஐ.நா.வின்
செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.