2012-06-05 15:20:04

சமுதாய மோதல்களுக்குத் தீர்வுகாண பெரு நாட்டு கர்தினால் அழைப்பு


ஜூன்,05,2012. உண்மைக்கு இயைந்த வழிகளை வாழ்க்கையில் பின்பற்றும்போதுதான் சமுதாய மோதல்களுக்கு தீர்வுகாண முடியும் என மீண்டுமொருமுறை பெரு நாட்டின் அமைதிக்கான திருஅவையின் விண்ணப்பத்தை முன்வைத்துள்ளார் அந்நாட்டு கர்தினால் Juan Luis Cipriani.
சுரங்கத்தொழிலுக்கு எதிரான அண்மைப் போராட்டங்களில் இருவர் கொல்லப்பட்டது குறித்து தலத்திருஅவையின் ஆழ்ந்த கவலையை வெளியிட்ட, தலைநகர் லீமா கர்தினால் சிப்ரியானி, உண்மை, அமைதி மற்றும் நீதியின்மீது ஆர்வமில்லாதபோது பேச்சுவார்த்தைக்கு அங்கு இடமில்லை என உரைத்ததுடன், கற்களையும் பொய்களையும் கொண்டு மக்கள் வளர்ச்சியைப் பெற முடியாது எனவும் கூறினார்.
அனைத்துப் பெரு நாட்டு மக்களும் வளர்ச்சியை விரும்பினாலும், அது வன்முறை மூலம் பெறப்படுவதை அவர்கள் ஏற்கவில்லை எனவும் கூறினார் கர்தினால்.
அமைதி என்பது அதிகாரத்தில் உள்ளோரின் பணி மட்டுமல்ல, அது அனைத்துப் பெரு நாட்டு மக்களின் ஒன்றிணைந்த பணி என மேலும் கூறினார் கர்தினால் சிப்ரியானி.








All the contents on this site are copyrighted ©.