ஏழ்மையை அகற்றுவதன் மூலம் 230 கோடி டாலரை ஆஸ்திரேலியா சேமிக்க முடியும் என்கிறது கத்தோலிக்க
அவை
ஜூன் 04, 2012. நலவாழ்வுக்குப் பாதிப்பை உருவாக்கும் ஏழ்மை போன்ற சமூகக் காரணங்கள் அகற்றப்பட்டால்
தீராத நோய்களால் துன்புறுவோரின் எண்ணிக்கையை குறைப்பதோடு மருத்துவச் செலவுகளையும் பெருமளவில்
குறைக்கலாம் என்கிறது ஆஸ்திரேலிய கத்தோலிக்க நல மையத்தின் அண்மை ஆய்வு. ஏழ்மையை ஆஸ்திரேலியாவிலிருந்து
விரட்டுவதன் மூலம் அந்நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் மருத்துவமனைச் செலவுகளிலிருந்து 230 கோடி
டாலர்களைச் சேமிக்க முடியும் எனவும், தீரா நோயாளிகளின் எண்ணிக்கையில் ஐந்து இலட்சம்வரை
குறைக்க முடியும் எனவும் இவ்வாய்வு மூலம் தெரிய வந்துள்ளது. நலவாழ்வுக்கு எதிரான ஏழ்மை
போன்ற சமூகக் காரணங்களை அகற்றுவதன் மூலம் ஒவ்வோர் ஆண்டும் மருத்துவ உதவி தேடி மருத்துவமனைக்கு
வருபவர்களின் எண்ணிக்கையை 60 ஆயிரம் வரைக் குறைக்கலாம் எனவும் கூறுகிறது அந்த ஆய்வு. போதிய
வருமானமின்மை, உறைவிடமின்மை, கல்வியறிவின்மை போன்றவைகள், மக்களின் நலவாழ்வுப் பாதிப்புக்கு
காரணங்களாக உள்ளன என மேலும் கூறுகிறது ஆஸ்திரேலிய கத்தோலிக்க நலவாழ்வு அவையின் ஆய்வு.