சிரியாவில் நடைபெறும் சமாதான முயற்சிகளையும் கருத்தில் கொள்ளவேண்டும் - திருப்பீடத்
தூதர்
மே,31,2012. ஐ.நா.வும் உலக நாடுகளும் சிரியாவில் நடைபெறும் தாக்குதல்களை மட்டும் தங்கள்
கவனத்தில் கொள்ளாமல், அங்கு நடைபெறும் சமாதான முயற்சிகளையும் கருத்தில் கொள்ளவேண்டும்
என்று தமாஸ்குவின் திருப்பீடத் தூதர் பேராயர் Mario Zenari கூறினார். சிரியாவில் தொடர்ந்து
நடைபெற்றுவரும் போர்களால் மனம் சோர்ந்துள்ள இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும் சமுதாயத்தின்
அடிமட்டத்தில் வாழும் மக்களாக இருந்தாலும், அவர்களுக்கே உரிய பாணியில் அமைதி வழிகளைத்
தேடி வருகின்றனர் என்று கூறிய பேராயர் Zenari, அண்மையில் Houla எனுமிடத்தில் நடைபெற்ற
கொடூரங்கள் மக்களிடம் விழிப்புணர்வை உருவாகியுள்ளது என்று கூறினார். சிரியாவின் தற்போதையப்
பிரச்சனை அரசியல் நிலையற்ற நெருக்கடி மட்டும் அல்ல என்று கூறிய பேராயர் Zenari, ஓராண்டுக்கும்
மேலாக, நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருப்பதால், கொள்ளை, ஆள் கடத்தல் ஆகிய குற்றங்களும்
பெருகியுள்ளன என்ற கவலையை வெளியிட்டார். கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ் திருஅவைத் தலைவர்கள்,
இஸ்லாமியத் தலைவர்கள் இணைந்து இப்புதனன்று Homs நகரில் ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டனர்
என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறியது.