2012-05-30 16:05:52

கிறிஸ்துவின் போதனைகளால் கோடான கோடி மக்களின் வாழ்வு நிறைவடைந்துள்ளது - தலாய் லாமா


மே,30,2012. இயேசு கிறிஸ்துவின் போதனைகள் மனித குலத்திற்குக் கிடைத்துள்ள ஓர் அரிய கருவூலம், கிறிஸ்துவின் போதனைகளால் கோடான கோடி மக்களின் வாழ்வு நிறைவடைந்துள்ளது என்று புத்த மதத் தலைவரான தலாய் லாமா கூறினார்.
ஐரோப்பாவின் பல நாடுகளில் அரசியல் மற்றும் மத நல்லிணக்கக் கூட்டங்களில் கடந்த சில வாரங்களாகப் பங்கேற்று வரும் தலாய் லாமா, அண்மையில் வியன்னா நகரில் உள்ள புனித ஸ்தேவான் பேராலயத்திற்குச் சென்றிருந்தபோது இவ்வாறு கூறினார்.
ஆஸ்திரியா நாட்டில் கடந்த சில நாட்களாகப் பயணங்கள் செய்துவந்த தலாய் லாமா அவர்கள், தன் பணங்களின் ஒரு முத்தாய்ப்பாக, வியன்னா பேராயர் கர்தினால் Christoph Schönborn உடன் புனித ஸ்தேவான் பேராலயத்தைப் பார்வையிட்ட பின்னர், கர்தினாலுடன் தனிப்பட்ட வகையிலும் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டார்.
உலகில் மத நல்லிணக்கம் உருவாக 1975ம் ஆண்டிலிருந்து முயற்சிகள் மேற்கொண்டு வரும் தலாய் லாமா அவர்கள், லூர்து நகர், பாத்திமா நகர் ஆகிய இடங்களில் உள்ள திருத்தலங்களைத் தான் பார்வையிட்டது தனக்குள் மேலான எண்ணங்களை உருவாக்கியுள்ளது என்று எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.