மே,28,2012. தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதால் இலங்கை
அரசு அதிகாரிகளின் கண்டனங்களுக்கு உள்ளாகி வரும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களுக்கு
ஆதரவு தெரிவித்து பல்வேறு குழுக்கள் அமைதி செப வழிபாடு ஒன்றை இஞ்ஞாயிறன்று நடத்தின.
மன்னார் மாவட்ட மக்கள் மத பேதங்களை மறந்து ஒன்றுபட்டு தமது எதிர்ப்புக் குரலை தெரிவித்துள்ளதுடன்,
பல்வேறு சமுக அமைப்புக்களும், ஆயருக்கு எதிரான அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக கண்டித்துள்ளன. ஞாயிறு
காலை மன்னாரில் அரசு அதிகாரிகளுக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், கிறிஸ்தவ, இந்து
மதங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு அரசு செயல்பாட்டிற்கு எதிரான வாசக
அட்டைகளை ஏந்தியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்றிருந்தனர். காலை 10 மணிக்கு
புனித செபஸ்திரியார் தேவாலயத்தில் ஆரம்பமாகி பிற்பகல் 1 மணிவரையும் நடைபெற்ற இந்த அமைதி
செப வழிபாடு மற்றும் ஊர்வலத்தின்போது, சமுக அமைப்புகளும் கிறிஸ்தவ மதத்தலைவர்களும், தமிழ்
மக்களின் உரிமைக்குரலை நசுக்க விடமாட்டோம் எனவும் அறிவித்தனர்.