மே,28,2012. கிறிஸ்தவ, இஸ்லாமிய மத நம்பிக்கை உள்ள அனைவரும் செபங்கள் வழியாகவும், உண்ணாநோன்புகள்
வழியாகவும் சிரியா நாட்டின் அமைதிக்காக வேண்டுதல்களை எழுப்பும்படி அந்நாட்டின் திருப்பீடத்
தூதர் பேராயர் மாரியோ செனாரி (Mario Zenari) கூறினார். சிரியாவின் இராணுவம் அண்மையில்
மேற்கொண்ட தாக்குதல்களில் குழந்தைகள், அப்பாவி மக்கள் உட்பட 88 பேர் கொல்லப்பட்ட செய்தியைக்
கேட்ட பேராயர் செனாரி ஆயுத வன்முறைகளைக் களையும்படி வேண்டுகோள் விடுத்தார். அரசு தரப்பிலும்,
வன்முறை கும்பல்கள் தரப்பிலும் பல்வேறு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதால், இந்த வன்முறைகளில்
இறப்பது சாதாரண பொதுமக்களே என்று பேராயர் செனாரி பிதேஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த
பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு, ஆயுதங்களைக் களைவது அனைத்துத் தரப்பினரின் தார்மீகக் கடமை
என்பதை வலியுறுத்தினார். படுகொலைகள் குறித்து ஒவ்வொரு நாளும் வெளியாகும் செய்திகளைக்
கேட்டு, மக்கள் நம்பிக்கையற்ற நிலையில், குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர் என்று தமாஸ்கு நகர்
புனித பவுல் திருத்தலத்தின் நிர்வாகியான அருள்தந்தை Romualdo Fernandez கூறினார்.