2012-05-25 15:33:12

ஏழாவது அனைத்துலக குடும்ப மாநாட்டில் கலந்து கொள்வோருக்குப் பரிபூரண பலன்


மே25,2012. இம்மாதம் 30 முதல் ஜூன் 3 வரை இத்தாலியின் மிலான் நகரில் நடைபெறும் ஏழாவது அனைத்துலக குடும்ப மாநாட்டில் கலந்து கொள்வோருக்குப் பரிபூரணபலன் சலுகையை வழங்கியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
பாவமன்னிப்புச்சலுகை வழங்கும் அப்போஸ்தலிக்க நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள ஆணையில் திருத்தந்தை வழங்கியுள்ள இந்தப் பரிபூரணபலன் பாவமன்னிப்புச் சலுகை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குடும்ப மாநாட்டில் பங்கு கொள்வதற்கு ஆன்மீகரீதியாகத் தங்களைத் தயாரிப்போருக்கும், இந்நிகழ்வில் கலந்து கொள்ள இயலாமல் இருக்கும், அதேவேளை செபத்தாலும், குறிப்பாக, இம்மாநாட்டு நிகழ்வுகளில் திருத்தந்தையின் உரைகளைத் தொலைக்காட்சி மற்றும் வானொலி மூலம் கேட்பவர்க்கும் இச்சலுகையைத் திருத்தந்தை வழங்குகிறார் என்றும் அந்த ஆணை தெரிவிக்கிறது.
மேலும், விசுவாசிகள், குடும்பங்களின் நலனுக்காகச் செபிக்கும் ஒவ்வொரு நேரமும் இந்தப் பரிபூரண பலனின் ஒரு பகுதியைப் பெறுகிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
பரிபூரணபலன் என்பது பாவத்திற்கானத் தற்காலிகத் தண்டனை கடவுள் திருமுன் மன்னிக்கப்படுவதாகும்.








All the contents on this site are copyrighted ©.