2012-05-23 15:54:49

திருத்தந்தையின் புதன் பொதுமறைபோதகம்


மே 16, 2012. இரண்டு நாட்களாக உரோம் நகரில் மழை பெய்திருந்தாலும், அதற்கு எவ்வித அடையாளமுமின்றி புதன் காலை கதிரவனின் ஒளியுடன் விடிய, தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த பல ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தூய பவுலின் மடல்களில் செபம் குறித்துக் காணப்படும் எண்ணங்களுக்கு விளக்கம் கொடுக்கும் தொடரைக் கடந்த வாரம் துவக்கியத் திருத்தந்தை, இறைவனை அப்பா என அழைக்க நம்மை தகுதியாக்கும் தூய ஆவி குறித்து தூய பவுலின் மடல்களில் காணப்படும் இரு பகுதிகளை நோக்குவோம் என இவ்வார பொது மறைபோதகத்தைத் துவக்கினார்(கலா 4:6; உரோ 8:5). தந்தையுடன் நாம் கொள்ளும் அன்புறவை வெளிப்படுத்தும் விதமாக 'அப்பா' என்ற வார்த்தை இயேசுவால் பயன்படுத்தப்பட்டது. அதேவேளை, நாம் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவது என்பது, நம்முள் காணப்படும் கிறிஸ்துவின் ஆவி இருப்பின் கனியாகும். திருமுழுக்கில் நாம் பெற்ற தூய ஆவியின் கொடை வழியாக, இயேசுவின் முடிவற்ற மகனுக்குரிய உரிமையில், நம் தத்தெடுத்தல் மூலம் பங்குப் பெற்று, இறைவனின் குழந்தைகளாக மாறியுள்ளோம். கிறிஸ்தவ செபம் என்பது நம் முயற்சி மட்டுமல்ல, மாறாக, நமக்குள் இருந்து நம்மோடு இணைந்து தந்தையாம் இறைவனை நோக்கி கூக்குரலிடும் தூய ஆவியின் செயலாகும் என தூய பவுல் நமக்குக் கற்பிக்கிறார். கிறிஸ்துவின் உடலாம் திருஅவையின் உயிருள்ள அங்கத்தினர்களாகிய நாம், நம்முள் உறைந்திருக்கும் மூவொரு கடவுளின் அன்பில் நம் செபத்தின் வழி நுழைகிறோம். நமது தனி மனித செபம் என்பது திரு அவையின் செபம் எனும் மிக உயரிய இன்னிசையின் ஒரு பகுதியாகும். நம்முள் உறைந்திருக்கும் தூய ஆவியின் செயலாற்றல்களுக்கு நம் இதயங்களை முற்றிலுமாகத் திறப்போம். அதன் வழி, நாம், தந்தையாம் இறைவனில் மேலும் அதிக நம்பிக்கைக் கொள்வதற்கும், இயேசுவின் சாயலாக நாம் மாறுவதற்கும் வழிநடத்தப்படுவோமாக.
இவ்வாறு தன் புதன் மறை போதகத்தை வழங்கிய திருத்தந்தை, இப்பொதுமறைபோதகத்தில் பங்கேற்ற, சுவீடனின் எவாஞ்சலிக்கல்-லூத்தரன் கிறிஸ்தவ ஒன்றிப்பு அவையின் அங்கத்தினர்களுக்கும், பிலிப்பீன்சின் மணிலா புனித தாமஸ் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தின் அங்கத்தினர்களுக்கும் தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்தியா, இங்கிலாந்து, டென்மார்க், ஃபின்லாந்து, ஸ்வீடன், பிலிப்பீன்ஸ், தென்கொரியா மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து வந்து பொதுமறைபோதகத்தில் கலந்து கொண்ட திருப்பயணிகளுக்கும் தன் வாழ்த்துக்களை வெளியிட்டு தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.