2012-05-23 15:47:11

டப்ளின் நகரில் இயேசுவின் காலத்தைய இடங்களுக்கு கணணி வழியே கற்பனைப் பயணம் மேற்கொள்வது போன்ற கண்காட்சி


மே,23,2012. 2000 ஆண்டுகளுக்கு முன் இயேசு வாழ்ந்த இடங்களுக்கு மீண்டும் சென்று வந்ததைப் போன்ற ஓர் அனுபவம் எனக்குக் கிடைத்தது என்று அகில உலக திருநற்கருணை மாநாட்டின் முக்கியப் பேச்சாளர்களில் ஒருவரான John Waters கூறினார்.
ஜூன் 10ம் தேதி முதல் 17ம் தேதி முடிய அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெறவிருக்கும் திருநற்கருணை மாநாட்டையொட்டி அங்கு வருபவர்கள் இயேசுவின் காலத்தைய இடங்களுக்கு கணணி வழியே கற்பனைப் பயணம் மேற்கொள்வது போன்ற ஒரு கண்காட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கற்பனைப் பயணத்தை மேற்கொண்ட John Waters, ICN கத்தோலிக்கச் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறினார்.
'இறைபிரசன்னத்தால் மேற்கொள்ளப்பட்ட வாழ்வு - திருத்தூதர்களின் பார்வையில்' என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த முப்பரிமாண திருப்பயணம், திருநற்கருணை மாநாடு நடைபெறும் அனைத்து நாட்களிலும் காலை முதல் மாலை வரை திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கண்காட்சியைக் காண்போர் இயேசுவின் பணி வாழ்வில் அவர் சென்ற இடங்களுக்குத் தாங்களும் சென்று, இறுதியாக இயேசு விண்ணேற்றம் அடைந்த இடத்தை சென்றடைவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.