இத்தாலி நில அதிர்ச்சி குறித்து திருத்தந்தை மற்றும் மிலான் கர்தினால் இரங்கற் செய்தி
மே 21,2012. இஞ்ஞாயிறன்று காலை இத்தாலியின் வடபகுதியில் நிகழ்ந்த நில அதிர்ச்சியால் ஏற்பட்ட
உயிரிழப்புகள் மற்றும் பெரும் சேதங்கள் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார் திருத்தந்தை
16ம் பெனடிக்ட். இந்நில அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களோடு ஆன்மீக முறையில் தான்
மிக அருகாமையில் இருப்பதாகவும், இந்த இயற்கைப் பேரிடரில் உயிரிழந்தவர்களின் ஆன்மீக இளைப்பாற்றிக்காகவும்,
காயமுற்றோரின் துன்பங்கள் அகலவும் இறைவனை நோக்கி செபிப்பதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை. இதற்கிடையே,
இத்தாலியின் எமிலியா ரொமாஞ்ஞா பகுதியில் இடம்பெற்ற இந்நில அதிர்ச்சி குறித்து தன் ஆழ்ந்த
கவலையையும், பாதிக்கப்பட்ட மக்களுடன் ஆன ஒருமைப்பாட்டையும் வெளியிட்டு மிலான் நகர் கர்தினால்
ஆஞ்சலோ ஸ்கோலாவும் இரங்கற்தந்தி ஒன்றை அப்பகுதி தலத்திருஅவைக்கு அனுப்பியுள்ளார். இஞ்ஞாயிறு
காலை இத்தாலியின் மாந்தோவா நகர் அருகே இடம்பெற்ற நில அதிர்ச்சியில் 7பேர் உயிரிழந்தனர்,
50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் மற்றும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த எண்ணற்ற கட்டிடங்களும்
சேதமடைந்துள்ளன.