Rebecca Pippert என்பவர்
ஒருநாள் தன் காரில் அலுவலகம் சென்றுகொண்டிருந்தார். போகும் வழியில் நான்கு சாலை சந்திப்பு
ஒன்றில் சிவப்பு விளக்கு மாறுவதற்கு அவர் காத்திருந்தார். மென்மையாகத் தென்றல் வீசிக்
கொண்டிருந்ததால், ரெபெக்கா கார் கண்ணாடியை இறக்கிவிட்டிருந்தார். அப்போது அருகில் ஒரு
கார் வந்து நின்றது. சாலை விளக்கு சிவப்பிலிருந்து பச்சையாக மாறிய அத்தருணத்தில், அருகில்
வந்து நின்ற காரிலிருந்து ரெபெக்காவை நோக்கி ஏதோ ஒரு பொருளை எறிந்துவிட்டு, அந்தக் காரில்
இருந்தவர்கள் பறந்து சென்றனர். எறிந்த பொருள் ரெபெக்காவின் முகத்தைத் தாக்கியது, மடியில்
விழுந்தது. அதிர்ந்துபோன ரெபெக்கா, காரை நிறுத்திவிட்டு, மடியில் விழுந்த பொருள் என்னவென்று
பார்த்தார். நற்செய்தி எண்ணங்கள் அடங்கிய ஒரு சிறு நூல் அது. மடியில் விழுந்தது நற்செய்தி
எண்ணங்கள் என்பது ரெபெக்காவிற்கு மிகிழ்வைத் தந்தது. அந்த நூலை எறிந்தவர்கள் நல்ல எண்ணத்துடன்தான்
செயல்பட்டிருக்கவேண்டும் என்பதையும் ரெபெக்கா உணர்ந்தார். இருந்தாலும், தன் முகத்தில்
அறையும்படி அந்த நற்செய்தி தன்னை வந்து சேரவேண்டுமா என்ற கேள்வியும் அவர் மனதில் எழுந்தது.
நற்செய்தியால் மற்றவர்களைத் ‘தாக்கும்’ இந்த வழியை “Torpedo Evangelism” அதாவது, "தாக்குதல்
வழி நற்செய்தி பரப்புதல்" என்று Rebecca Pippert தான் எழுதியுள்ள நூலில் குறிப்பிட்டுள்ளார்.
"உப்புக் குப்பியிலிருந்து உலகிற்கு" (Out of the Salt Shaker: Into the World) என்ற
அந்நூலில் நற்செய்தியை உலகிற்கு எடுத்துச் செல்லும் வழிகளைப்பற்றி ரெபெக்கா எழுதியுள்ளார்.
இயேசுவின்
விண்ணேற்ற விழாவை இன்று நாம் கொண்டாடுகிறோம். விண்ணேற்றத்திற்கு முன்னதாக தன் சீடர்களை
சந்தித்த இயேசு அவர்களிடம் இறுதியாக விட்டுச்சென்ற செய்தியை மாற்கு நற்செய்தியில் நாம்
இவ்வாறு வாசிக்கிறோம்: மாற்கு நற்செய்தி 16: 15-18 அக்காலத்தில்,
இயேசு பதினொருவருக்குத் தோன்றி, அவர்களை நோக்கி, “உலகெங்கும்
சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப்
பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப்
பெறுவர். நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்; அவர்கள்
என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்;
பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத்
தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள்
குணமடைவர்” என்று கூறினார்.
“உலகெங்கும்
சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்”என்று இயேசு கூறிய வார்த்தைகள் கிறிஸ்தவ வரலாற்றில் பலவழிகளில் பொருள் கொள்ளப்பட்டுள்ளன.
இதனால் நன்மைகள் விளைந்துள்ளன. பிரச்சனைகளும் எழுந்துள்ளன. அசிசி நகர் புனித பிரான்சிஸ்
போல, நற்செய்தியைத் தங்கள் வாழ்வாக மாற்றிய புனிதர்கள் பலர் உலகெங்கும் சென்று நற்செய்தியைப்
பறைசாற்றினார்கள். வார்த்தைகள் அதிகமின்றி தங்கள் வாழ்க்கையால் அவர்கள் பறைசாற்றிய நற்செய்தியால்
நன்மைகள் விளைந்தன. ரெபெக்கா தன் கார் பயணத்தில் சந்தித்ததைப் போல, சக்தி வாய்ந்த ‘தாக்கும்
வழிகள்’ மூலம் நற்செய்தி பறைசாற்றப்பட்டபோது, பிரச்சனைகளும் எழுந்துள்ளன.
நற்செய்தியை
யார் பறைசாற்றுவது? அதை எப்படி பறைசாற்றுவது? என்ற கேள்விகள் கிறிஸ்தவ வரலாற்றில் அடிக்கடி
எழும் கேள்விகள். பொதுவாக, நற்செய்தியைப் பறைசாற்றுதல் என்றதும், கோவில்களில், மேடைகளில்
முழங்கக்கூடிய ஒரு சக்திவாய்ந்த மறையுரையாக இதை நாம் நோக்குகிறோம். இந்தக் கோணத்தில்,
குருக்கள், துறவியர், என்ற ஒரு குறுகிய குழுவுக்கு இந்தப் பணியை ஒதுக்கி வைத்து விடுகிறோம்.
இன்றைய நற்செய்தியில் இயேசு தம் சீடர்களுக்குக் கொடுத்துள்ள கட்டளையை ஆழமாக சிந்திக்கும்போது,
நமது எண்ணங்கள் முழுமையான எண்ணங்கள் அல்ல என்பதைப் புரிந்துகொள்ளலாம். 'நற்செய்தியைப்
பறைசாற்றுங்கள்' என்று இயேசு கூறிய அதே மூச்சில், அந்தப் பறைசாற்றுதலில்
பங்கேற்போரின் வேறு சில பணிகளையும் குறிப்பிட்டுள்ளார். நற்செய்தியில் நம்பிக்கை கொண்டவர்கள்
பேய்களை ஓட்டுவர், உடல்நலமற்றோரைக் குணமாக்குவார், பாம்போ, கொடிய நஞ்சோ அவர்கள் உயிரைப்
பறிக்காது என்ற அடையாளங்களை இணைத்துக் கூறுகிறார். மேடைகளில், கோவில்களில் முழங்கப்படுவதோடு
நற்செய்தியின் பறைசாற்றுதல் நின்று விடுவதில்லை. குணமளிக்கும் பணிகளில், தீய சக்திகளை
உலகினின்று விரட்டியடிக்கும் பணிகளில் இந்தப் பறைசாற்றுதலை நாம் உணர முடியும் என்பதை
இயேசு தெளிவுபடுத்துகிறார். இந்தக் கோணத்திலிருந்து பார்த்தால், நாம் அனைவரும் நற்செய்தியைப்
பறைசாற்றுவதற்கு அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை உணரலாம்.
வாய் வார்த்தைகளால் மேடைகளில்
பறைசாற்றப்படும் நற்செய்தியைக் காட்டிலும், வாழ்க்கையால் உணர்த்தப்படும் நற்செய்திகள்
இன்னும் ஆழமான தாக்கங்களை உருவாக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். வாழ்க்கையால்
நற்செய்தியைப் பறைசாற்றிய பலரில், Dr. Albert Schweitzerம் ஒருவர். இவர் வாழ்க்கையில்
நடந்த நிகழ்ச்சியொன்று இப்போது என் நினைவை நிறைக்கிறது. இவர் ஆப்ரிக்காவில் மேற்கொண்ட
அற்புதமான மருத்துவப் பணிகளுக்காகவும், அணு ஆய்வுகள் இவ்வுலகிற்குத் தேவையில்லை என்ற
எண்ணத்தை உலகில் வளர்க்க இவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் 1952ம் ஆண்டு உலக அமைதிக்கான
நொபெல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. அடுத்த ஆண்டு இவர் அமெரிக்காவின் சிக்காகோ நகருக்கு
சென்றார். அவரை வரவேற்க பத்திரிக்கையாளர்கள், பெரும் தலைவர்கள் என்று பலர் அவர் வரவிருந்த
இரயில் நடைமேடையில் காத்திருந்தனர். Albert இரயிலை விட்டு இறங்கியதும், கரவொலியும், காமிரா
ஒளிவிளக்களும் அந்த இடத்தை நிறைத்தன. தன்னை சிறிது நேரம் மன்னிக்க வேண்டும் என்று Albert
வேண்டியபடி அந்தக் கூட்டத்தை விலக்கிக்கொண்டு சென்றார். அந்த நடைமேடையில் இரு பெட்டிகளைச்
சுமந்தபடி தவித்துக் கொண்டிருந்த ஒரு வயதான கறுப்பின பெண்மணிக்கு உதவிசெய்து, அவரை ஒரு
பேருந்தில் ஏற்றிவிட்டார். பின்னர் அவருக்காகக் காத்திருந்த கூட்டத்திடம் வந்தார் Albert.
இதைக்கண்ட ஒரு பத்திரிகையாளர் மற்றொருவரிடம், "நான் இதுவரை கோவில்களில் மறையுரைகளைக்
கேட்டிருக்கிறேன். இதுதான் முதல்முறையாக, ஒரு நடமாடும் மறையுரையைப் பார்த்திருக்கிறேன்"
என்று கூறினார்.
Albert Schweitzer 25 வயது இளைஞனாக இருந்தபோது மறையுரை வழங்குவதில்,
இறையியல் வகுப்புக்கள் நடத்துவதில் தன்னிகரற்ற புகழ் பெற்றிருந்தார். ஆனால், தனது 30வது
வயதில் அவர் மருத்துவம் படித்து, ஆப்ரிக்காவில் மிகவும் பின்தங்கிய ஒரு பகுதியில் மருத்துவ
மனையொன்றை நிறுவி பணிசெய்யத் துவங்கினார். பல்வேறு இடர்கள், சிறைவாசம் என்று அவர் வாழ்வில்
சவால்கள் வந்தாலும், வறுமையில் வாடிய ஆப்ரிக்க மக்களுக்கு மருத்துவப் பணிகளை பல ஆண்டுகள்
செய்துவந்தார். இளமையில் நற்செய்தியை வார்த்தைகளாய் முழங்கிப் புகழ்பெற்ற Albert, தன்
வாழ்வின் பிற்பகுதியில் நற்செய்தியை வாழ்வாக்கினார். Albert போன்ற நற்செய்திப் பணியாளர்களின்
பறைசாற்றுதலே இந்த உலகில் நற்செய்தியை இருபது நூற்றாண்டுகளாய் அதிகமாய், ஆழமாய் பரப்பி
வந்துள்ளது என்று சொன்னால், அது முற்றிலும் உண்மை. வாழ்வால் நற்செய்தியைப் பறைசாற்றுவதற்குப்
பெரும் அறிவாளிகள், பேச்சாளர்கள் தேவையில்லை. இயேசுவின் சீடர்களே இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள்.
இயேசு
விண்ணேற்றம் அடைந்ததும் நிகழ்ந்ததாய்ச் சொல்லப்படும் ஒரு கற்பனைக் கதை இது. இயேசு விண்ணகம்
சென்றதும், தலைமைத்தூதர் கபிரியேல் அவரைச் சந்தித்தார். "உங்கள் பணியைத் திறம்பட முடித்துவிட்டீர்கள்.
உலகில் உங்கள் நற்செய்தியைத் தொடர்ந்து பரப்புவதற்கு என்ன திட்டங்கள் வைத்துள்ளீர்கள்?"
என்று கேட்டார். "என்னுடையப் பணியைத் தொடரும்படி ஒரு சில மீனவர்களிடமும், வரி வசூலிப்பவர்களிடமும்
சொல்லியிருக்கிறேன்" என்று இயேசு சொன்னதும், கபிரியேல் தூதர் அவரிடம், "உங்கள் சீடர்களைப்
பற்றிச் சொல்கிறீர்களா? அவர்களைப் பற்றித்தான் உங்களுக்கு நன்கு தெரியுமே... ஒருவர் உங்களைத்
தெரியாது என்று மறுதலித்தார், மற்றொருவர் உங்களை நம்பவில்லை. இவர்களை நம்பியா இந்தப்
பணியை ஒப்படைத்தீர்கள்? கட்டாயம் வேறு சில நல்ல திட்டங்கள் உங்கள் எண்ணத்தில் இருக்கும்,
அப்படித்தானே?" என்று கேட்டார். இயேசு அவரிடம் அமைதியாக, "நற்செய்திப் பணியை இவர்களை
நம்பியே நான் ஒப்படைத்துள்ளேன். இவர்களைத்தவிர, என்னிடம் வேறு எந்தத் திட்டமும் கிடையாது"
என்று பதிலளித்தார்.
இருபது நூற்றாண்டுகளைத் தாண்டி நற்செய்தி இன்றும் இவ்வுலகில்
நடமாடி வருகிறது என்றால், இன்றும் அச்செய்தி அர்த்தம் உள்ளதாக இருக்கிறது என்றால், அதற்குக்
காரணம் நற்செய்தியைத் தங்கள் அறிவுத்திறன் கொண்டு, வார்த்தைப் புலமை கொண்டு போதித்தவர்களோ,
அவர்கள் பயன்படுத்திய வழிகளோ அல்ல... நற்செய்தியும், அதன் மையமான இயேசுவும்தான் காரணம்.
இயேசுவும் அவர் தந்த நற்செய்தியும் என்ற மையங்களிலிருந்து விலகி, நற்செய்தியைப்
போதிப்பவரின் புகழ், அவர் மேற்கொள்ளும் வழிகள் என்று எப்போதெல்லாம் நமது சிந்தனைகள் தடம்
புரண்டனவோ, அப்போதெல்லாம் பிரச்சனைகள் எழுந்துள்ளன என்பதை கிறிஸ்தவ வரலாறு மீண்டும்,
மீண்டும் நமக்குச் சொல்லித்தருகிறது.
வார்த்தைகள் அதிகம் கூறாமல், நற்செய்தியை
வாழ்ந்து காட்டிய அசிசி நகர் புனித பிரான்சிஸ், Dr. Albert Schweitzer, அருளாளர் அன்னை
தெரேசா என்று பல்லாயிரம் நற்செய்திப் பணியாளர்களின் வாழ்வால் நற்செய்தி இன்றும் நம்மிடையே
வாழ்கிறது என்பதை எண்ணி, இறைவனுக்கு நன்றி சொல்வோம். வாழ்வாக மாறிய இந்த நற்செய்திகள்
நமது மத்தியில் உலவும்போது, நஞ்சாகப் பரவிவரும் தீய சக்திகள் நம்மை அழித்துவிட முடியாது
என்பதை மனதார நம்புவோம்.