சிரியாவில் ஐ.நா.வின் அமைதித் திட்டத்திற்குத் திருப்பீடத் தூதர் முழு ஆதரவு
மே 18,2012. இம்மாதம் 10ம் தேதி சிரியாவின் தமாஸ்கஸ் நகரில் நடந்த வாகனக் குண்டு வெடிப்புத்
தாக்குதல்களுக்குப் பின்னர் அந்நாட்டில் வன்முறை தொடர்ந்து இடம் பெற்று வருவதாக சிரியாவிலுள்ள
திருப்பீடத் தூதர் பேராயர் Mario Zenari கூறினார். புரட்சியாளர்களின் ஹோம்ஸ் பகுதியில்
சிரியா இராணுவம் இவ்வியாழனன்றும் குண்டுவீச்சுத் தாக்குதல்களை நடத்தியிருப்பதைக் குறிப்பிட்ட
பேராயர் Zenari, வன்முறையும் தாக்குதல்களும் தொடர்ந்து இடம் பெற்றாலும் அந்நாட்டிற்கெனப்
பரிந்துரைக்கப்பட்ட அமைதி ஒப்பந்தம் செயல்படுத்தப்படுவதற்கு சர்வதேச சமுதாயம் அழுத்தம்
கொடுக்குமாறு கேட்டுள்ளார். சிரியாவின் நிலைமை மிகுந்த கவலை தருவதாகக் கூறிய பேராயர்,
ஐ.நா. பிரதிநிதியாக அந்நாட்டில் அமைதிக்கானப் பேச்சுவார்த்தைகளை நடத்திய Kofi Annan னின்
அமைதித் திட்டத்திற்கு சர்வதேச சமுதாயம் வலுவான ஆதரவளிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.