2012-05-18 15:48:17

ஊழலையும் வரிஏய்ப்பையும் தடுப்பதற்கு ஒளிவுமறைவற்ற நடவடிக்கை அவசியம் – உலகின் பல ஆயர்கள்


மே 18,2012. ஒவ்வோர் ஆண்டும் சுமார் 12,500 கோடி டாலரை வளரும் நாடுகளிலிருந்து சுரண்டும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு பல நாடுகளின் கத்தோலிக்க ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அர்ஜெண்டினா, ஆஸ்ட்ரியா, பெல்ஜியம், காமரூன், சாட், சிலே, கொலம்பியா, காங்கோ சனநாயகக் குடியரசு, பிரான்ஸ், ஜெர்மனி, பெரு, காங்கோ குடியரசு, பிரிட்டன் போன்ற நாடுகளின் 17 ஆயர்கள் இணைந்து ஐரோப்பிய சமுதாய அவைக்கு இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.
நாடுகளின் பொருளாதாரங்கள் நெருக்கடிக்கு உள்ளாகி, சமுதாயத்தின், குறிப்பாக ஏழைகளின் அன்றாட வாழ்க்கைக் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில், நிதி அமைப்பில் அறநெறிகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும் புதிய சட்டங்கள் உருவாக்கப்படுமாறு குடிமக்கள் கேட்கிறார்கள் என்றும் ஆயர்களின் அறிக்கை கூறுகிறது.
சிலரின் பேராசை, உலக சமுதாயத்தில் மிகவும் நலிந்த மக்களின் வாழ்வாதாரத்தையே ஆட்டம் கொள்ளச் செய்துள்ளது என்று குறை கூறும் அவ்வறிக்கை, இயற்கை வளங்களைச் சுரண்டி சேமிக்கப்படும் செல்வம், ஒரு சிறுபான்மைக்கும் மட்டுமே உரியதாக ஆக்கப்படுவதைத் தடுக்கும் புதிய சட்டங்கள் அவசியம் என்றும் கோரியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.