பிரான்ஸ் நாட்டின் புதிய அரசுத் தலைவருக்குத் திருத்தந்தை அனுப்பிய வாழ்த்துக்கள்
மே,17,2012. ஆன்மீக, நன்னெறி விழுமியங்களைப் பின்பற்றும் பரம்பரையில் வளர்ந்துள்ள பிரான்ஸ்
நாட்டிற்கு Francois Hollande புதிய அரசுத் தலைவராக இருந்து மக்களை நீதியான முறையில்
வழிநடத்த தன் செபங்களும் ஆசீரும் உண்டு என்று திருத்தந்தை கூறினார். இச்செவ்வாயன்று
பிரான்ஸ் நாட்டின் புதிய அரசுத் தலைவராகப் பதவியேற்ற Hollande அவர்களுக்கு தன் வாழ்த்துக்களை
அனுப்பியத் திருத்தந்தை, பிரான்ஸ் நாட்டு மக்கள் மீதும், அரசுத் தலைவர் மீதும் மிகுதியானத்
தன் அசீரை வழங்குவதாகக் கூறினார். மனிதச் சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் ஒரு சக்தியாகவும்,
ஐரோப்பாவை சமாதான வழிகளில் நடத்தும் ஒரு தூண்டுதலாகவும் பிரான்ஸ் நாடு அமைவதே தன் மேலான
விருப்பம் என்பதை திருத்தந்தை தன் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். நீதியையும்,
உறவையும் வளர்க்கும் ஒரு சமூகமாக, சிறப்பாக, ஏழை நாடுகளை உலக சமுதாயத்தில் ஒருங்கிணைக்கும்
ஒரு நாடாக பிரான்ஸ் திகழ்வதற்குத் தன் சிறப்பான செபங்களை அனுப்பியுள்ளதாகக் கூறியுள்ளார்
திருத்தந்தை.