அணு ஆயுதங்களின் உருவாக்கம் 21ம் நூற்றாண்டில் வாழும் மனித குலத்திற்கு பெரும் அழிவாகவே
அமையும் - அமெரிக்க ஆயர்கள்
மே,17,2012. அணு ஆயுதங்களின் உருவாக்கமும் சேகரிப்பும் 21ம் நூற்றாண்டில் வாழும் மனித
குலத்திற்கு பெரும் அழிவாகவே அமையும் என்று அமெரிக்க ஆயர்கள் கூறியுள்ளனர். அணு ஆயுதங்களை
முற்றிலும் அகற்றும் திட்டங்களை அமெரிக்க அரசு மேற்கொள்ளவேண்டும் என்ற விண்ணப்பம் ஒன்று
50,000க்கும் அதிகமானோரின் கையொப்பங்களுடன் அமெரிக்க பாராளு மன்றத்திற்கு அண்மையில் அனுப்பப்பட்டது.
இந்த விண்ணப்பத்தில் அமெரிக்க ஆயர் பேரவையின் பிரதிநிதிகளும் கையொப்பமிட்டுள்ளனர் என்று
கத்தோலிக்க ஊடகங்கள் கூறுகின்றன. அணு ஆயுதங்களைப் பாதுகாப்பதில் ஒரு சிறு தவறு நிகழ்ந்தாலும்
அது மிகப் பெரும் அழிவையே தரும் என்று கூறும் இந்த விண்ணப்பம், இந்த ஆயுதங்களைக் காப்பதற்கு
அரசுகள் செலவிடும் தொகையைக் கொண்டு பல ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை மேற்கொள்ள முடியும்
என்று வலியுறுத்தியுள்ளது.